(விளக்கம்) மன்னவனுடைய பெருங்குடிகளுள் வைத்துப் பொருளுடைய வாணிகன்
மகள் என்றவாறு "பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு
உயர்ந்து ஓங்கு செல்வத்தான"'' என இளங்கோவும் ஓதுதல் காண்க
(சிலப் - மங்கல - 31 - 32) அவ்வாணிகன் தன் பொருளைப்
பேணிக்கொள்ளும் பொருட்டுச் சேனையும் உடையன் என அவன்
சிறப்புணர்த்தியபடியாம். தன்னொடு நவில - தன்னோடு பயிலும் பொருட்டு,
தன்னைமார் - தமையன்மார், இவர் இவளோடு பயிலம் வேற்றுநாட்டிலிருந்து
கலத்திற்றந்த மகளிர் என்க. கூறுபட நிறுத்தி முழுகுவது தன்னைக்
கண்டுபிடிக்கும் பொருட்டு என்க. இஃதொரு விளையாட்டு வகை யென்க. மின்
பொன்னரிமாலை என ஒட்டுக. வணிகருள்ளும் வேந்தர் உண்மையின்
மைத்துனமன்னன் என்றார். அவன் முன்னர்த் தோன்றும் பொருட்டுப் புணைதழீஇ
நீத்தொடு மறல என்க. நீத்து - வெள்ளம். மறலுதல் - எதிர்த்துச்
செல்லல்.
|