உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
           அணியற லன்ன வைம்பாற் கூழையர்
          மணியுமிழ்ந் திமைக்கும் வயங்குகொடிப் பைம்பூண்
          முத்தொடு முரணித் தத்து மாகத்துக்
    55    காமங் காலா வேம நோக்கத்து
          மாத ராற்றா மழலையங் கிளவிப்
          பேதை மகளிர் சேதடி யணிந்த
          கண்பிணிப் பகுவாய்க் கிண்கிணி யரவமும்
 
        52 - 58: அணி..........அரவமும்
 
(பொழிப்புரை) அழகிய அறல் போன்ற ஐம்பாலாகிய கூந்தலை யுடையராகிய மணிகள் சுடர்வீசி மின்னிவிளங்காநின்ற கொடியாகிய பசிய மணியணிகலன்கள் முத்து மாலையோடு மாறுபட்டுத் தவழாநின்ற மார்பினையும், காமப்பண்பினைத் தோற்றுவித்த லில்லாத இன்பந்தரும் வெள்ளை நோக்கத்தினையும், காதலையுண்டாக்காத மழலையாகிய சொற்களையும் உடைய பேதைப் பருவத்து மகளிர் தமது சிவந்த அடியிலணிந்த மூட்டுவாய்கள் பிணிக்கப்பட்ட பிளந்த வாயையுடைய கிண்கிணியணிகள் முரலுதலானே உண்டான ஆரவாரமும் என்க.
 
(விளக்கம்) அறல் - கருமணல். கூழை - கூந்தல். மணிசுடருமிழ்ந்தென்க. முத்து - முத்துமாலை. முரணி - நிறத்தால் மாறு பட்டு. தத்துதல் - தவழ்தல்; புரள்தல். காலா - காலுதல் என்பதன் எதிர் மறை. தோற்றுவியாத என்க. மாதர் - காதல். சேதடி - சிவப்பு ஆகிய அடி. கண் - மூட்டுவாய். பேதை - மகளிரின் பருவத்தினுன் முதற்பருவம். (பெதும்பை மகளிர்)