உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
41. நீராட்டரவம்
 
         
          தித்தி யொழுகிய மெத்தெ னல்குலர்
          மட்டப் பூந்துகிற் கட்டளைக் கச்சையர்
          நரையிடைப் படர்ந்த நறுமென் கூந்தலர்
    100   திரையுடைக் கலுழி திறவதி னாடித்
          தாமிள மகளிரைக் காமஞ் செப்பி
          அஞ்சல் செல்லாது நெஞ்சுவலித் தாடுமிந்
          நங்கையர் நோற்ற பொங்குபுனற் புண்ணியம்
          நுங்கட் காகென துனித்தவை கூறி
    105   நேரிழை மகளிரை நீராட் டயரும்
          பேரிளம் பெண்டிர் பெருங்கலி யரவமும்
 
        97 - 106: தித்தி..........அரவமும்
 
(பொழிப்புரை) பொன்னிறத்தேமல் படர்ந்த மெத்தென்ற அல்குலை யுடையவரும் கொய்து மட்டஞ் செய்து பூந்துகிலையும் அளவமைந்த கச்சணிந்தவரும் இடையிடையே நரைவிராவிய நறியமெல்லிய கூந்தலையுடை யோரும் ஆகிய பேரிளம் பெண்டிர்ப் பருவத்துமகளிர் அலையுடைய நீரின் கண்ணே திறம்பட ஆடிப்பின்னர்த் தம்முடைய இளமகளிர்க்கும் அந்நீராடலை விரும்புதற்குக் காரணமான மொழிகளைக் கூறி இந்நங்கையர் முன்பு இயற்றிய நோன்பின்பயனாக இப்பொழுது இத்திருநீர்ப்பொய்கையிலாடும் புண்ணியப் பேறும் எய்தாநின்றனர் கண்டீர்! பொங்காநின்ற இப்புனற் புண்ணியம் நுங்கட் கும் எய்துவதாக. நீவிரும் அஞ்சாமல் நெஞ்சு துணிந்து ஆடுங்கோள் என்று தாம் கருதியவற்றைக் கூறி நேரிய அணிகலன்களையுடைய அக்கன்னி மக ளிரை நீராடல் செய்வியா நிற்றலாலே உண்டான பேராரவாரமும் என்க.
 
(விளக்கம்) தித்தி - பொன்னிறமுடைய தேமல். "வேங்கையம்பூத் தாதுக்கன்ன நுண்பஃறித்தி" எனப் பிறசான்றோரும் ஓதுதல் காண்க, (நற்றிணை - 157) மட்டம் -கொய்து மட்டஞ்செய்த கச்சை - ஒருவகை ஆடை. கலுழி - வெள்ளம். திறவதின் - திறம்பட. தம்மிளமகளிர் - தாமிளமகளிர் என முதல் குறுகாது நின்றது. தாமீன்ற மகளிர் என்றவாறு. எனவே இப்பருவத்திற்குத் தம் மக்களை அறநெறிப்படுத்தும் ஆசிரியை ஆதல் சிறப்பென்பது பெற்றாம்; நோற்றமையாலுண்டான புனற்புண்ணியம் என்க. நீராட்டயர்விக்கும் என்க. இஃது ஏழாம் பருவம். (வேறு பலவகை ஒலிகள்)