உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
         
     40    சேர்ந்த வீதியுட் சிறப்பொடு பொலிந்த
           எவ்வெவ பண்டமு மவ்வயிற் போத்தந்
           தொலியுஞ் சேனை யிணைதனக் கொவ்வா
           மலிநீர் மாடத்துப் பொலிவுகொண் மறுகின்
           வெயிலழல் கவியாது வியலக வரைப்பின்
     45    உயிரழல் கவிக்கு முயர்ச்சித் தாகிப்
           பூந்தா ரணிந்த வேந்தல் வெண்குடை
           வேந்தன் மகளே விரையா தென்மரும்
 
                 (இதுவுமது)
          40 - 47: சிறப்பொடு..........என்மரும்
 
(பொழிப்புரை) சிறப்போடு பொலிவு பெற்றுள்ள எந்த எந்தப் பொருள்களையும் அவ்விடத்தே வருவித்து வைத்தமையால் ஆரவாரமுடைய உஞ்சைநகரந்தானும் தனக்கு நிகராக மாட்டாத மிக்க அந்நீர் மாடங்கள் நின்ற அப்புது நகரத்தினது பொலிவுடைய வீதியின்கண்ணே வாசவதத்தையின் தோழிமார் வெயிலினது வெப்பத்தை மறைக்கும் பொருட்டன்றி அகன்ற இடத்தையுடைய நிலவுலகின்கண் வாழாநின்ற உயிரினங்களின் துயரத்தை மாற்றும் பொருட்டே கவித்த உயர்ச்சியையுடையதாகி மலர்மாலை அணிந்த பெருமைமிக்க வெள்ளைக் குடையையுடைய சக்கரவர்த்தியின் திருமகளே! விரைந்து நடவாதே கொள்! என்று கூறுவாரும் என்க.
 
(விளக்கம்) இப்பகுதியின் விண்பொரு வியன்குடை வெயின் மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப்பதுவே கூர்வேல் வளவ' எனவரும் புறநானூற்றுப் பகுதியோடு (35) ஒப்பிடுக. உயிர் அழல் - என்புழி அழல் - ஆகுபெயர் - துன்பம் என்க. விரையாது என்றது விரையாமற் செல்க என்னும் குறிப்புடையது..