உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
            பொங்குதிரை ஞாலத்து மயக்க நீக்கும்
           திங்க ளன்னநின் றிருமுகஞ் சுடரத்
     60    துன்பப் பேரிரு டுமிக்கத் தோன்றிய
           நங்காய் மெல்ல நடவென் போரும்
           வல்லவ னெழுதிய பல்பூம் பத்திக்
           கட்டெழில் சேர்ந்த வட்டணைப் பலகைப்
           பளிக்குமணிச் சிவிகையுள் விளக்குறுத் ததுபோல்
     65    தோன்று மாதரைத் தோன்ற வேத்திப்
 
                      (இதுவுமது)
               58 - 65: பொங்கு..........ஏத்தி
 
(பொழிப்புரை) பொங்காநின்ற அலைகளையுடைய கடல் சூழ்ந்த உலகத்தின்கண் மயக்கந் தரும் இருளைப் போக்காநின்ற திங்கள் மண்டிலத்தைப்போன்று நின்னுடைய அழகிய முகம் சுடர் விடுதலானே உயிர்களின் துன்பமாகிய பேரிருளைப் போக்கும் பொருட்டுப் பிறந்தருளிய பெருமாட்டியே! மெல்ல நடந்தருளுக! என்போரும் ஆகி, ஓவியத்துறை கைபோய புலவன் ஒருவனால் எழுதப்பட்ட பலவாகிய மலர் வரிசையையும் கட்டழகுடைய வட்டணையாகிய பலகையினையும் உடைய பளிங்கும் மணியும் அழுத்திய சிவிகையின் அகத்தே திருவிளக்கினை ஏற்றிவைத்தாற் போன்று நன்கு விளங்கித் தோன்றா நின்ற வாசவதத்தையை அவள் சிறப்பெல்லாம் தோன்றுமாறு புகழ்ந்து பாராட்டி என்க.
 
(விளக்கம்) திங்கள் போன்ற நின் எனினும் திங்கள் போன்ற முகம் எனினுமாம். துமிக்க - போக்க; அழிக்க. மாதர் - வாசவதத்தை. தம் மார்வந்தோன்ற ஏத்தியெனினுமாம்.