உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
             கதிர்நகை முறுவற் காரிகை மாதரை
            எதிர்கொண்டு வணங்கி யிழித்தனர் நிறீஇக்
     100     காஞ்சன மாலையுஞ் செவிலியும் பற்றி
            எஞ்சலில் கம்மத் திணைதனக் கில்லாப்
            பஞ்ச வண்ணத்துப் பத்திபல புனைந்த
            பொங்குமலர்த் தவிசிற் பூமிசை யாயினும்
            அஞ்சுபு மிதியாக் கிண்கிணி மிழற்ற
     105     வேழத் தாழ்கைக் காழொடு சேர்த்த
            கண்டப் பூந்திரை மண்டபத் திழைத்த
            நன்னகர் நடுவட் பொன்மணை யேற்றிப்
 
                      (இதுவுமது)
                 98 - 107: கதிர்..........ஏற்றி
 
(பொழிப்புரை) ஒளி தவழாநின்ற பற்களையும் புன்முறுவலையும் உடைய அழகுமிக்க வாசவதத்தையை எதிர்கொண்டு வணங்கி ஊர்தியினின்றும் இறக்கி அம்மணைமேலே நிறுத்திப் பின்னர்க் காஞ்சனமாலை என்னுந் தலைமைத்தோழியும் சாங்கியத்தாயும் அவளிரு கைகளையும் பற்றிக் குறைவில்லாத தொழிற்றிறத்திலே தனக்கு நிகரில்லாததாய் ஐந்துவகையான நிறங்களானும் பத்திக் கோலங்கள் பலவெழுதிய உயர்ந்த மலரணை மேற் பரப்பப்பட்ட மலர்களின் மேலேயாயினும் அஞ்சி மிதியாத அடிகளிலே கட்டிய கிண்கிணி முரலும்படி அழைத்துப் போய் யானையினது தூங்கா நின்ற கையை ஒத்த குத்துக்கோலோடு சேர்த்து இயற்றிய கண்டப்பூந்திரை வளைத்துக் கட்டி மண்டபம் போன்று இயற்றப்பட்ட நல்லதொரு படவீட்டின் நாப்பண் இட்ட பொன் மணை மேலேற்ற என்க.
 
(விளக்கம்) இழித்தனர் - இறக்கி; முற்றெச்சம், பஞ்ச வண்ணம் - வெண்மை செம்மை கருமை பொன்மை பசுமை என்பன. தவிசின் மேற் பரப்பியபூ என்க. வேழம் - மூங்கிலுமாம். கைக்காழ் என்பது பெயராகக் கொள்க. மண்டபத்து - மண்டபம் போன்ற, ஏற்றி - ஏற்ற வென்க.