உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
             பெருந்திசை நோக்கி யிருந்தவ ணிறைஞ்சி
            யாத்த காதலொ டேத்த லாற்றாள்
     110     அடித்தல முதலா முடித்தலங் காறும்
            மொய்யுறத் தோய்ந்த நெய்தயங்கு பைந்தாள்
            மங்கலப் புல்லவ ரின்புறப் பெய்தபின்
            நீராடு பல்கல நெரிய வேற்றி
            ஆராடு தானத் தைந்நூ றாயிரம்
     115     பசும்பொன் மாலையுந் தயங்குகதிர் முத்தமும்
            இரவன் மாக்கட்குச் சொரிவன ணல்கித்
            தீங்கருங் காதற் செவிலியுந் தோழி
            காஞ்சன மாலையுங் கையிசைத் தேந்த
            அளற்றெழு தாமரை யள்ளிலை நீரில்
     120     துளக்குறு நெஞ்சி னடுக்கமொடு விம்மித்
            தோழியர் சூழ வூழூ ழொல்கித்
            தலைப்புனன் மூழ்குத லிலக்கண மாதலின்
            மணலிடு நிலைத்துறைத் துணைவளை யார்ப்பக்
            குடைவனள் குலாஅய்க் குறிப்புநனி நோக்கிப்
     125     படையேர் கண்ணியர் பணிந்துகை கூப்பிப்
 
                  (மஞ்சனம் ஆட்டல்)
              108 - 125: பெருந்திசை..........கூப்பி
 
(பொழிப்புரை) பெருமையுடைய திசையாகிய கிழக்குத் திசையை நோக்கியிருந்து பிணித்த காதலாலே கணவனை யன்றி அவ்விடத்தே தெய்வம் தொழுதலில்லாதவளாகிய வாசவதத்தையினது அடிமுதலாக முடித்தலங்காறு நிரம்ப நெய் தோய்ந்து விளங்காநின்ற பசிய அடியையுடைய அறுகம்புல்லினாலே அச்சாங்கியத்தாயும் காஞ்சனமாலையும் இன்பமுண்டாக நெய்யேற்றிய பின்னர், நீராடுங்கால் அணிதற்கியன்று பல்வேறு அணிகலன்களையும் நெருங்க அணிந்து தலைப்புனல் ஆடுங்காலத்தே தானம் வழங்கி ஆடுதல் மரபாகலாதலின் ஆராட்டின் பொருட்டு வழங்கும் தானமாக ஐந்நூறாயிரம் பசிய பொன்னும் மாலையும் விளங்கா நின்ற ஒளியுடைய முத்தும் ஆகிய இவற்றை இரவலர்க்கு வாசவதத்தையே வழங்குவாளாக வழங்கிக் குற்றமற்ற அன்புடைய செவிலியாகிய சாங்கியமகளும் தோழியாகிய காஞ்சனமாலையும் கைகோத்துத் தழுவி யெடாநிற்பச் சேற்றிலே தோன்றிய தாமரையினது செறிந்த இலையின்கண்ணதாகிய நீர் போன்று ததும்புகின்ற நெஞ்சின்கண் நடுக்கத்தோடு விம்முதலுற்றுத் தன்னைத் தோழியர் சூழ்ந்து வாராநிற்ப முறைமுறையே துவண்டு நடந்து சென்று மணலிட்டு நிலைக்குமாறு செய்யப்பட்ட துறையின் கண்ணே இறங்கித் தனது இருகை வளையல்களும் ஆரவாரிக்கும்படி நீராடாநின்ற வாசவதத்தையைத் தோழியர் குனிந்து நோக்கி அவள் குறிப்பினைப் பெரிதும் உணர்ந்துகொண்டு வேலும் வாளும் போன்ற கண்ணையுடைய அம்மகளிர் கைகூப்பி வணங்கி என்க.
 
(விளக்கம்) கணவனையன்றித் தெய்வம் தொழாக் கோட்பாடுடையளாகலின் அவண் ஏத்தலாற்றாள் என்றவாறு. மங்கலப்புல் - அறுகம்புல். அவர் - செவிலியும் தோழியும். ஆராடு தானம் - ஆராட்டினைக் குறித்து வழங்குந் தானம். அளறு - சேறு. வாசவதத்தை நீராடற்பொருட்டு மணலிட்டு நிலைக்கும்படி செய்த நீர்த்துறை என்றவாறு. குலாஅம் - குனிந்து. தலைப்புனன் மூழ்குங்கால் இவ்வாறு இறைவணக்கஞ் செய்து நெய்யேற்றித் தானம் கொடுத்து ஆடுதல் இலக்கணமாதலின் என்பது கருத்து.