உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
            அங்கர வல்கு னங்கைக் கின்றிவை
           மங்கல மண்ணுநீ ராவன வென்று
           நெஞ்ச நெகிழ்ந்துவந் தன்புகலந் தாடியல்
     140    அரவிற் பரந்த வல்குன் மீமிசைக்
           கலாஅய்க் கிடந்த குலாத்தரு கலிங்கம்
           நிலாவிடு பசுங்கதிர்க் கலாவ மேய்ப்ப
           நீரணி கொண்ட வீரணி நீக்கிக்
           கதிர்நிழற் கவாஅப் பதுமநிறங் கடுக்கும்
     145    புதுநூற் பூந்துகி லருமடி யுடீஇக்
 
        (வாசவதத்தையை ஒப்பனை செய்தல்)
            137 - 145: அங்கரவு.........உடீஇ
 
(பொழிப்புரை) அவ்விடத்தே பாம்பின் படம்போன்ற அல்குலையுடைய வாசவதத்தைக்கு இவை மங்கலந்தரும் முழுக்கு நீராகும் என்று மனம் அன்புகலந்து நெகிழ்ந்து மகிழ்ந்து, ஆடாநின்ற பாம்பின் படம்போன்று விரிந்த அவளுடைய அல்குலின் மேலே குலைந்து கிடந்த வளைவுடைய ஆடை நனைந்தமையின் ஒளிவீசும் பசிய சுடரையுடைய மயிற் றோகையைப் போன்று தோன்றாநிற்ப நீராடற் பொருட்டு அணிந்துகொண்ட அந்த ஈர ஆடையைக் களைந்து கதிரவனுடைய ஒளிக்கு அவாவுகின்ற வெண்டாமரை மலர் நிறத்தைப்போன்ற நிறமுடைய புது நூலானாய அழகிய அரிய வெள்ளாடையினை உடுத்தி என்க.
 
(விளக்கம்) ஆடியல் அரவு - நல்லரா. கலாஅய் - குலைந்து. குலாத் தரு - வளைந்த. கலாவம் - தோகை.