உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
         
     155    சிறப்பவை யாதலிற் சீர்மையொ டிருந்து
           காமர் கோலங் கதிர்விரித் திமைப்பத்
           தாமரை யுறையுண் மேவாள் போந்த
           தேமலர்க் கோதைத் திருமகள் போலக்
           கோமகள் போதுங் குறிப்புநனி நோக்கி
 
              (இதுவுமது)
        155 - 159: சிறப்பு..........நோக்கி
 
(பொழிப்புரை) அவ்வணிகலன்கள் அணிதல் சிறப்பாகலின் வாசவதத்தை அவற்றை அணியுந்துணையும் அமைதி யோடிருந்து அழகிய அவ்வொப்பனை அணிகலன்கள் ஒளி பரப்பி விளங்கா நிற்பத் தனக்குரிய தாமரைமலராகிய உறையுளை விரும்பாது ஈண்டெழுந்தருளிய தேன் துளிக்கும் மலர்மாலையணிந்த திருமகளே போன்று அக் கோமகள் எழுந்தருளாநின்ற குறிப்பினை நன்குணர்ந்து, என்க.
 
(விளக்கம்) நோக்கி வந்த (166) என இயையும், சீர்மை ஈண்டு அமைதியின் மேற்று. இமைப்ப - விளங்க. கோமகள் - பிரச்சோதன மன்னன் மகள். மேவாள் - விரும்பாள்.