உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
         
     160    அரணி கான்ற வணிகிளர் செந்தீக்
           கிரிசையின் வழாஅ வரிசை வாய்மை
           அளப்பரும் படிவத் தான்ற கேள்வித்
           துளக்கி னெஞ்சத்துத் துணிந்த வாய்மொழி
           சால்வணி யொழுக்கி னூலிய னுனித்த
     165    மந்திர நாவி னந்தண மகளிரும்
           வரும்புன லாடற்குப் பரிந்தனர் வந்த
           விரைபரி மான்றே ரரைச மகளிரும்
           அறிவினுஞ் செறிவினும் பொறியினும் புகழினும்
           எறிகடற் றானை யிறைமீக் கூறிய
     170    செம்பொற் பட்டத்துச் சேனா பதிமகள்
           நங்கை தோழி நனிநா கரிகியும்
 
            (அந்தணர் மகளிர் முதலியோர்)
             160 - 171: அரணி..........நாகரிகியும்
 
(பொழிப்புரை) தீக்கடைகோல் தோற்றுவித்த அழகுமிக்க சிவந்த தீயோம்பற்றொழிலின்கண் வழுவாத சிறப்பினையும், வாய்மையையும் அளவிறந்த விர தங்களையும் நிரம்பிய மறைநூற் கேள்வியையும் நடுக்கற்ற நெஞ்சத்தினையும் தெளிந்த மெய்ம் மொழியினையும் சால்பினையும் அழகிய ஒழுக்கமுடைய மெய்நூலின் தன்மையை ஆராய்ந்துகொண்ட மந்திரத்தையுடைய நாவினையும் உடைய அந்தணர் மகளிரும் வாராநின்ற புதுநீரின்கண் ஆடற்குப் பெரிதும் விரும்பி வந்த விரைந்து செல்லும் குதிரை பூட்டிய தேரினையுடைய மன்னர் மகளிரும், அறிவுடைமையானும் செறிவுடைமையானும் ஒளியுடைமையானும் புகழுடைமையானும் பகைவரைக் கொல்லாநின்ற கடல்போன்ற படைகட்குத் தலைமை தாங்குதலானும் ஏனையோராற் புகழப்பட்டவனும் ஏனாதி என்னும் பட்டத்திற்கறிகுறியாக அரசன்பாற் பெற்ற செம்பொன்னாலியன்ற பட்டத்தை உடையவனுமாகிய சேனாதிபதியின் மகளும் வாசவதத்தையின் தோழியும் ஆகிய, மிகுந்த நாகரிகமுடைய நங்கையும் என்க.
 
(விளக்கம்) அரணி - தீக்கடைகோல். கிரிசை - கிரியை. இப்பகுதியில் அந்தணரியல்பு அழகுற அடுக்கி வருதலுணர்க. சால்வு - சால்பு, நற்குண நிறைவு. இறை - தலைமை. அறிவு முதலியவற்றான் மீக்கூறிய என்க. பட்டம் - ஏனாதிப்பட்டம்.