உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
            நீர்தலைக் கொண்ட நெடும்பெருந் துறைவயிற்
     185    போர்தலைக் கொண்டு பொங்குபு மறலிக்
           கொங்கலர் கோதை கொண்டுபுறத் தோச்சியும்
           அஞ்செஞ் சாந்த மாகத் தெறிந்தும்
           நறுநீர்ச் சிவிறிப் பொறிநீ ரெக்கியும்
           முகிழ்விரற் றாரை முகநேர் விட்டும்
     190    மதிமரு டிருமுகத் தெதிர்நீர் தூவியும்
           பொதிபூம் பந்தி னெதிர்நீ ரெறிந்தும்
 
              (நீர் விளையாட்டு)
           184 - 191: நீர்.............எறிந்தும்
 
(பொழிப்புரை) நீரைத் தன்னிடத்தே கொண்ட நெடிய பெரிய துறையின்கண்ணே நீர்விளையாட்டுப் போரினை மேற்கொண்டு சினந்து பகைத்து மணம் விரிகின்ற மலர்மாலையாகிய படைக்கலத்தால் ஒருவர் முதுகிலே ஒருவர் புடைத்தும் அழகிய சிவந்த சந்தனக் குழம்பை மார்பின்கண் எறிந்தும் நறுமணநீரைச் சிவிறியாகிய பொறியால் வீசியும் முகிழ்த்த விரலிலே கொண்ட பந்தினை முகத்தின் மிசைவிட்டும் திங்கள் போன்ற அழகிய முகங்களின் நீரைத் தூவியும் மணநீர் பொதிந்த பந்துகளாலே எதிரெதிர் நீர் வீசியும் என்க.
 
(விளக்கம்) போர் - விளையாட்டுப்போர். மறலி - பகைத்து. கொங்கு - மணம்; தேனுமாம்; பூந்தாதுமாம். தாரை - பந்து. மணநீர் பொதிபந்தென்க.