உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
            சிவந்த கண்ணினர் வியர்ந்த நுதலினர்
           அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த வாடையர்
           ஒசிந்த மருங்குல ரசைந்த தோளினர்
     195    நல்கூர் பெரும்புனல் கொள்க வென்றுதம்
           செல்வ மெல்லாஞ் சேர்த்திறைத் தருளி
           இளையா விருப்பிற்றம் விளையாட்டு முனைஇக்
           கயம்பா டவியப் புறங்கரை போந்து
 
              (இதுவுமது)
        192 - 198: சிவந்த..........போந்து
 
(பொழிப்புரை) சிவந்த கண்ணினராய், வியர்த்த நுதலினராய் அவிழ்ந்த கூந்தலையுடையராய் நெகிழ்ந்த ஆடையினையுடையராய்த் துவண்ட இடையினை யுடையராய் இளைத்த தோளையுடையராய்த் தமது அணிகலன் எல்லாம் அணிகலன் இன்றி வறுமையுடைய இப் பெரிய வெள்ளம் ஏற்றுக்கொள்வதாக என்று கூறித் தம் அணிகலன்களைச் சேர்த்து வெள்ளத்தே வீசி வழங்கிப் பின்னும் இளைப்புறாத தமது வேட்கையாலே மீண்டும் ஆடி அவ்வாடலை வெறுத்துழி, அப்பொய்கையின்கண் ஆரவாரமடங்கும் படி புறத்தேயுள்ள கரைக்கண் ஏறி என்க.
 
(விளக்கம்) செல்வம் - ஈண்டு அணிகலம். நல்குரவு - ஈண்டு அணிகலமின்மை. கயம் - பொய்கை. பாடு - ஆரவாரம்.