உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
         
      215    சிந்தையி னொழிக்குஞ் செலவிற் றாகி
            அந்தர விசும்பி னமரர் பொருட்டா
            மந்திர முதல்வன் மரபிற் படைத்த
            இந்திரன் களிற்றொ டிணைந்துடன் பிறந்த
            இரும்பிடி தானு மிதற்கிணை யன்றென
     220    அரும்பிடி யறிவோ ராராய்ந் தமைத்தது
            காலினுங் கையினும் படைத்தொழில் பயின்றது
            கோலினும் வேலினு மறலினுங் குமைத்தது
            தட்பமும் வெப்பமுந் தாம்படிற் றீர்ப்பது
            பகலினு மிருளினும் பணியிற் பயின்ற
     225    திகலிருங் கும்பத் தேந்திய சென்னியது
 
                  (உதயணன் செயல்)
             215 - 225: சிந்தை...............சென்னியது
 
(பொழிப்புரை) மனவேகத்தையும் தனக்குப் பின்னே ஒழிக்கும் வேகமுடைய செலவினையுடையதாய், வானுலத்தே வாழும் தேவர்கள் பொருட்டு மந்திரத்தையுடைய படைப்புக் கடவுளாலே முறையே படைக்கப்பட்ட இந்திரன் ஊர்தியாகிய அயிராவதம் என்னும் களிற்றியானையோடு இணைந்து பிறந்த பெரிய பிடியானை தானும் இப்பிடியானைக்கு நிகராகமாட்டாது என்று அரிய பிடியானையின் இலக்கணம் அறிவோர் ஆராய்ந்து எடுக்கப்பட்டதும், கால்களானும் துதிக்கையானும் நன்கு போர்த்தொழிற் பயிற்சி பெற்றதும், பகைவர் அம்புகளாற் போர்செய்யினும் மேவாற் போர் செய்யினும் அஞ்சாமல் அவர்களைக் காலாற்றுவைத்ததும், மிகையான தட்ப நிலையினாதல் வெப்பநிலையினாதல் தான் அகப்பட்டழியும் அவற்றை ஏற்றுக்கழிக்கும் ஆற்றலுடையதும், பகற்பொழுதினும் இரவுப் பொழுதினும் தொழில்செய்து பயின்றதும் பகைவரை எதிர்த்தலையுடைய மத்தகத்தாலே உயர்ந்த தலையினையுடையதும் என்க.
 
(விளக்கம்) அந்தர விசும்பு - இருபெயரொட்டு. முதல்வன் - படைப்புக் கடவுள். இந்திரன் ஊர்தியாகிய களிறு என்க. பிடி - பிடியிலக்கணம். கை - துதிக்கை, கோல் - அம்பு. மறலினும் - எதிர்த்தாலும். குமைத்தது - துவைத்தது. மத்தகம் உயர்ந்திருத்தல் நல்லிலக்கணம்.