உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
             மேலிற் றூயது காலிற் கடியது
            மத்தக மாலையொடு நித்தில மணிந்த
            துத்தரா பதத்து மொப்புமை யில்லாப்
            பத்திரா பதிமிசைப் பனிக்கடற் பிறந்த
     230    வெஞ்சூர் தடிந்த வஞ்சுவரு சீற்றத்து
            முருகவே ளன்ன வுருவுகொ டோற்றத்
            துதையண குமரன் புதைவா ளடக்கிச்
 
                   (இதுவுமது)
             226 - 232: மேலின்..........அடக்கி
 
(பொழிப்புரை) தன் உடம்பாலே தூய தன்மையுடையதும் காற்றினுங் காட்டில் விரைந்து செல்லுமியல்புடையதும் வடநாட்டின் கண்ணுந் தனக்கிணையாய பிடியை இல்லாததும் ஆகிய மத்தகமாலையும் முத்துமாலையும் அணியப்பட்ட பத்திராபதி என்னும் சிறந்த பிடியானையின்மேல் வீற்றிருந்த குளிர்ந்த கடலிலே தோன்றிய வெவ்விய சூர்மாவைப் பிணிமுக மென்னும் மானை மேற்கொண்டு அழித்தொழித்த யாவருக்கும் அச்சம் வருதற்குக் காரணமான சினத்தையுடைய முருகவேளையே ஒத்த உருவங்கொண்ட தோற்றத்தையுடைய உதயணகுமரன் தனது வாளினை உறையின்கண் செறித்து என்க.
 
(விளக்கம்) மேல் - உடலிலக்கணம். கால் - கால்களால் எனினுமாம். சூர் - சூர்மா. உருவு - அச்சமுமாம். புதை - உறை. உதயணன் யானைமேலிருந்தென்றதற்கு ஏற்ப, பிணிமுகமென்னும் யானைமேற் சென்று என உவமைக்குங் கூறுக. முருகவேள் சூர் தடிந்தமை 'மாக்கடன் முன்னி அணங்குடை யவுணர், ஏமம் புணர்க்குஞ், சூருடை முழுமுத றடிந்த பேரிசைக், கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந்தாங்கு' எனவும் (பதிற் - 11,) 'பாயிரும் பனிக் கடல் பார்துகள் படப்புக்குச், சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம ருழக்கி' எனவும். (பரிபா - 5.) 'பிணி முகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம், மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே' எனவும். (சிலப் - 24.) வருவனவற்றானுணர்க.