உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
             பாப்புரி யன்ன மீக்கொ டானை
     245    இருபுடை மருங்கினும் வருவளிக் கொசிந்து
            வீச்சுறு கவரித் தோற்றம் போல
            மிக்குவாய் கூரு மீட்சி வேட்கையன்
            கொக்குவா யன்ன கூட்டமை விரலினன்
            நண்ணா மன்னனை நலிவது நாடும்
     250    எண்ணமோ டிருந்தன னிரும்படி மிசையென்.
 
                  (இதுவுமது)
          244 - 250: பாப்புரி............மிசையென்
 
(பொழிப்புரை) பாம்புரித்த தோல்போன்று மென்மையுடைய தனது மேலாடை தன் இருமருங்கினும் வராநின்ற காற்றாலே அசைந்து வீசாநின்ற சாமரை போன்று தோன்றாநிற்பவும் தான் பகைவன் பானின்று மீளுதற்கண் தன் வேட்கை மிக்கு மேலும் வளராநிற்பவும் கொக்கினது அலகுபோன்று கூம்பிய விரலையுடையனாயிருந்து, தன் பகைமன்னனாகிய பிரச்சோதனனை நலிவதாகிய ஒரு மாற்றுச் செய்கையை ஆராயாநின்ற நெஞ்சத்தோடு அப்பெரிய பிடியானையின் மேலே வீற்றிருப்பானாயினன் என்க.
 
(விளக்கம்) பாப்புரி - பாம்புச்சட்டை. இருமருங்கினும் காற்றாலே பறக்கின்ற மெல்லிய வெள்ளாடை இருமருங்கினும் சாமரை வீசுதல் போன்று தோன்ற என்றவாறு. மீட்சி மிக்கு வாய்கூரும் வேட்கையன் என்க. வாய்கூருதல் : ஒருசொல். பெரிதும் வளர என்று பொருள் கொள்க. நலிவது - நலியும் மாற்றுச்செய்கை. கொக்குவாய் - கொக்கின் அலகு. உதயணன் ஆராய்ச்சி செய்யுங்கால் அவன் விரல் கொக்கலகு போன்று கூம்பியிருந்தன என்றவாறு. யாதேனுமொன்றனைச் சிந்திப்போர் விரல்களை அங்ஙனம் கூம்பவைத்துக் கோடல் இயல்பு என்க.

42. நங்கை நீராடியது முற்றிற்று.