உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           இயற்றினன் பண்டே கவற்சி நீங்கி
          இன்ன னென்று தன்னறி வுறீஇப்பின்
    60    குற்றப் படினு மற்ற மோம்பிப்
          போதத்தி னகன்று சாதத்தின் வழிநின்
          றடுகளிக் குரவைசே ரார்கலி யாளர்
          நடுகற் படப்பை யிடுகற் சீறூர்
          கண்கூட் டிருந்த வைம்பதிற் றிரட்டிப்
    65    புல்பரந்து கிடந்த கல்லதர் கடந்தபின்
 
                 (இதுவுமது)

                58 - 65: கவற்சி..........கடந்தபின்

 
(பொழிப்புரை) ஆதலின் அந்நாட்டின்கண் கவலையின்றி அவர்கட் கெல்லாம் பெருமான்தன்னை இன்னன் என்று அறிவுறுத்துப் பின்னர் எதிர்பாராத ஏதம் ஏதேனும் வரினும் சோர்வு கொள்ளாமல் பெருமா னுடைய நல்லறிவினாலேயே அதனை அகற்றி அந்நாட்டினின்றும் அகன்று, அப்பால் தமது பிறப்புப் பண்பினாலே அடுகின்ற கள்ளை யுண்டு களித்தாடாநின்ற குரவைக் கூத்தாகிய ஆரவாரத்தையுடையோரை யும் நடுகற்களையும் படப்பையையும் கொணர்ந்து குவித்த கற்குவியலை யும் ஆறலைப்போர் குழுவினையும் உடைய குறிஞ்சி நிலத்துச் சீறூர்களை யுடைய புல் பரவிக்கிடக்கின்ற மலைவழியாகிய நூறுகாவதங்களையும் கடந்தபின்னர் என்க.
 
(விளக்கம்) தன்னை இன்னன் என்று அறிவித்தால் அவர்கள் உதவியும் செய்வர் என்பது கருத்து. குற்றப்படினும் என்றது நாம் எதிர்பாராத குற்றம் நேரினும் என்றவாறு. அற்றம் - சோர்வு குற்றம் படினும் போதத்தினால் அகன்று என்க. போதம் - அறிவுடைமை. சாதம் - பிறப்பு. குரவையாடி ஆரவாரித்தற்கு அவர் பிறப்பே ஏது என்றபடியாம். நடுகல் - போரின்கண் விழுப்புண் பட்டிறந்த மறவர் பொருட்டு நடுகின்ற கல். இடுகல் - ஆறலைப்போர் தம்மாற்கொல்லப் பட்டோர் பிணங்களை மூடிய கற்குவியல். இதனைப் பதுக்கை என்றும் கூறுப. சீறூர் - குறிஞ்சிக்கண் ஊர் பிடிவருத்தமின்றி இயங்கும் என்பான் புல்பரந்து கிடந்த கல்லதர் என்றான்.