உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           யூகி யென்னு முரைபரந் தோடப்
    75    புல்வா யினத்திற் புலிபுக் காங்குக்
          கொல்வாள் வீசிக் கூற்றுத்தலை பனிப்ப
          வெல்போர் வேந்தன் வீரரைச் சவட்டி
          எய்தப் போதுவ லேத மாயினும்
          ஐய மின்றி யான்றுணி கருமம்
    80    செய்யா னாயின் வைய மிழக்கும்
          மையல் யானை மன்னவன் றானென
          இயைந்த தோழ னெண்ணிய கருமம்
          வயந்தக குமரன் வத்தவற் குரைப்ப
 
                           (இதுவுமது)

                74 - 83: யூகி..........உரைப்ப

 
(பொழிப்புரை) இங்ஙனம் எம் பெருமான் வாசவதத்தையைக் கைப் பற்றிக் கொண்டு சென்றபின் அளியேன் "அமைச்சர்க்கொருவன் ''யூகி'' என்னும் என்னுடைய புகழ் உலகெல்லாம் பரவிப்பாயும்படி மான்கூட்டத்தே புலிபுகுந்தாற்போன்று பிரச்சோதனன் படையுள் புகுந்து கொல்லும் எனது வாளைக் கூற்றுவனும் தலைநடுங்கும்படி வீசி வெல்லும் போரையுடைய பிரச்சோதன மன்னனுடைய போர் மறவரைக் கொன்று நூழிலாட்டி நம் நாட்டினை எய்துமாறு வருகுவன். இச்செயல்குற்றம் எனினும் யான் ஐயமின்றித் தெளிந்த இச்செயலைச் செய்யாதொழிவானாயின் உலகாட்சியை இழப்பன் மயக்கமுடைய யானையையுடைய எம்பெருமான்'' என்று கூறினன் என்று தன்னோடு இயைந்த தோழனாகிய யூகி கருதியசெயலை வயந்தக குமரன் உதயணகுமரனுக்குக் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) அமைச்சுத் தொழிலினும் போர்த்தொழிலினும் யூகி ஒப்பற்றவன் என்னும் என்புகழ் என்றவாறு. புல்வாய் - மான். சவட்டி - கொன்று. வத்தவன் - உதயணன்.