உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           தானும் யானுந் தீதில மாயின்
    85    வானும் வணக்குவ மேனைய தென்னென
          முறுவல் கொண்ட முகத்த னாகி
          நறுநீர் விழவி னாளணி யகலம்
          பூண்சேர் மார்வன் காண்பான் போலக்
          கடைப்பிடி யுள்ளமொடு மடப்பிடி கடைஇக்
    90    கோமக ளாடும் பூமலி பெருந்துறை
          அகலா தணுகாது பகலோன் விண்முனிந்
          திருநில மருங்கி னிழிதந் தாங்குப்
          பெருநலந் திகழுந் திருநலக் கோலமொடு
          செய்குறிக் கருமந் தெவ்வப் பட்டுழ
 
                 (உதயணன் செயல்)
                84 - 94: தானும்......பட்டுழி
 
(பொழிப்புரை) இச்செய்தி கேட்ட அணிகலனணிந்த மார்பையுடைய உதயணகுமரன் வயந்தகனை நோக்கி, "நண்பனே! யானும் யூகியந்தணனும் தீதின்றியுளே மாயவிடத்து வானுலகத்தையும் வென்று அடிப்படுக்குவேங் காண்! ஏனைய இச்செயலெல்லாம் எம் மாத்திரம்!" என்று கூறிப் புன்முறு வல் பூத்த முகத்தையுடையனாகி நறிய அந்த நீர்விழாக் காட்சிகளின் பெருக்கத்தைப் பார்த்து மகிழ்பவன் போன்று காட்டி, யூகியின் அறிவுரையைக் கடைப்பிடியாகக்கொண்ட நெஞ்சத்தோடு பத்திராபதியைச் செலுத்தி இறை மகளாகிய வாசவதத்தை நீராடாநின்ற மலர்மிக்க பெரியதுறையை அகலாமலும் அணுகாமலும் இயங்கிக் கதிரவன் வானத்தை வெறுத்துப் பெரிய நிலவுலகத் திலிறங்கி உலாவந்தாற் போன்று திகழாநின்ற பேரழகுடைய தோற்றத்தோடு தான் செய்யக் குறிக்கொண்ட செயலை மேற்கொண்ட பொழுது என்க.
 
(விளக்கம்) தானும் - யூகியும். ஏனைய - மற்றைச்செயல்கள். என் என்றது ஒரு பொருட்டில்லை என்றவாறு. அகலம் - பெருக்கம். கடைஇ - செலுத்தி. கோமகள் - வாசவதத்தை. பகலோன் - கதிரவன். செய்யக் குறிக்கொண்ட செய லென்க. தெவ்வப்பட்டுழி - மேற்கொண்டபொழுது. தெவ்வ - தெவு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்தது. ''தெவுக்கொளல் பொருட்டே'' என்பது தொல்காப்பியம் (உரி - 49).