உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           எட்டெனக் கூறிய திசைதிசை தொறூஉம்
          ஐந்தலை யுத்தி யரவுநா ணாக
    120    மந்தர வில்லி னந்தணன் விட்ட
          தீவா யம்பு திரிதரு நகரின்
          ஓவா தெழுமடங் குட்குவரத் தோன்றி
 
               (தீப்பட்ட ஊரின்கண் நிகழ்வன)

                 118 - 122: எட்டென..........தோன்றி

 
(பொழிப்புரை) எட்டென்று வரையறுத்துக் கூறப்பட்ட எல்லாத் திசைகளினும், மேருமலையை வில்லாகக் கொண்ட பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவன் ஐந்து தலைகளையும் படப்பொறிகளையும் உடைய பாம்பினை நாணாகக் கொண்டு எய்த அழல்வாயையுடைய அம்பு சுழலாநின்ற முப்புரத்தினுங்காட்டில் ஏழுமடங்காகக் கண்டோர்க்கு அச்சம் வரும்படி தீத்தோன்றா நிற்றலாலே என்க.
 
(விளக்கம்) உத்தி - படப்பொறி. அரவு - வாசுகி, மந்தரம். மலை உட்கு - அச்சம். இப்பகுதியோடு,
'ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
வேத மாபூண் வையத்தே ரூர்ந்து
நாக நாணா மலைவில் லாக
மூவகை, யாரெயில் ஓரழ லம்பின் முளிய
மாதிரம் அழல எய்து'
எனவரும் பரிபாடலை (5: 22 - 6) நினைக. தோன்றி - தோன்ற.