உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
         
    140    போதுகொண் டணியிற் பொறுக்க லாற்றாத்
          தாதுகொண் டிருந்த தாழிருங் கூந்தலர்
          கருங்கே ழுண்கண் கலக்கமொ டலமரப்
          பெருஞ்சூற் பெண்டிர் பேரழ னோக்கி
          வருவோர்க் கண்டு வணங்கின ரொருசார்
 
                 (இதுவுமது)

                  140 - 144: போது..........ஒருசார்

 
(பொழிப்புரை) ஒருபக்கத்தே மலர் கொண்டு தம்மை ஒப்பனை செய்தாலும் அம்மலரையும் பொறுக்கலாற்றாதவரும், பூந்துகள் பொருந்தி யிருந்த தாழ்ந்த கரிய கூந்தலையுடையோரும், முதிர்ந்த சூலினையுடை யோரும் ஆகிய மகளிர்கள் தங்கள் கரிய நிறமுடைய மையுண்ட கண்கள் கலக்கமெய்திச் சுழலாநிற்ப நகரில் எரியாநின்ற பெருந்தீயைக்கண்டு அஞ்சித் தம்மெதிர் வருவோரைக் கண்டு தம்மைப் பாதுகாக்குமாறு வணங்கா நின்றனர் என்க.
 
(விளக்கம்) இம்மகளிர் விழாவிற்குச் செல்லாமைக்குப் பெருஞ்சூல் என்பது குறிப்பேதுவாய் நின்றது. அணியினும் எனல் வேண்டிய உம்மை செய்யுள் விகாரத்தாற்றொக்கது. கேழ் - நிறம். தம்மைப் பாதுகாக்கும் படி வணங்கினர் என்க.