உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
           மாக்குருக் கத்தியொடு மல்லிகை மணந்த
     15    பூப்பெரும் பந்தர் நூற்றிரை வளைஇய
          காற்பெரு மாடங் காற்றெடு துளங்க
          விண்ணுலகு பெறினும் விடுத்தற் காகாப்
          பண்ணியல் பாணி நுண்ணிசை யோர்வார்
          ஊரக வரைப்பி னொல்லென வெழுந்ததோர்
     20   பூசலுண் டெனலும் பொறையுயர் மாமலை
          வேயுயர் பிறங்கற் சேயுயர்ந் தோடும்
          சூருறு மஞ்ஞையிற் சோர்ந்த கூந்தலர்
          புதல்வரை யொழிந்தியாம் போந்தன மேயென
          அதிவனர் நடுங்கி யழலி னுயிர்த்துத்
     25   திதலை யவ்வயி றங்கையி னதுக்கி
          உதிர்பூங் கொம்பி னொடுங்கு வோரும்
 
                      (இதுவுமது)
         14 - 26 :  மாக்குருக்கத்தி.........ஒடுங்குவோரும்
 
(பொழிப்புரை) கரியநிறமுடைய குருக்கத்திக் கொடியோடு மல்லிகைக் கொடியும் கூடி மலர்ந்த மலரானியன்ற பெரிய பந்தரைச் சுற்றி நூலானியன்ற திரையை வளைத்துக் கட்டப்பட்ட ஊன்றுகால்களையுடைய பெரிய தமது படமாடம் காற்றாலே அசையா நிற்பவும், தாம் வானவருலகம் பெறுவதாயினும் விடுவதற்கியலாத சுவை பொருந்திய பண்ணோடு நடக்கின்ற பாடலினது நுண்ணிய இசையைச் செவியாலே ஓர்ந்து நுகர்ந்திருப்போராகிய வேறு பல மகளிர், நகரத்தின்கண் ஒல்லென எழுந்ததொரு ஆரவாரம் உண்டு என்று அறிந்தோர் கூறக் கேட்டவுடனே. குவடுகள் உயர்ந்த பெரிய மலையின்கண் மூங்கில்கள் உயர்ந்துள்ள புதரினின்றும் பறந்து மிகவும் வானிலுயர்ந்து ஓடா நின்ற அச்சமுற்ற மயில்களின் தோகை போன்று அவிழ்ந்த கூந்தலை யுடையராய் வெளியிலே வந்து 'அந்தோ! யாம் எம் மக்களை விட்டு வந்தோமே! என் செய்தும்!' என்று மன வதிர்ச்சியை அடைந்து மெய்ந்நடுங்கித் தீயென வெய்தாக மூச்செறிந்து தேமல் படர்ந்த தமது அழகிய வயிற்றை அழகிய தம்கையாலே பிசைந்து பூவுதிர்ந்த கொம்பு போன்ற பொலிவிழந்து நினைவு அடங்கி நிற்போரும் என்க.
 
(விளக்கம்) மா கருமை - பெருமையுமாம். வளைஇய - வளைத்த. கால் - ஊன்றுகால் மாடம் - படமாடம். பாணி - பாட்டு; தாளமுமாம். பொறை - சிறுகுவடு. வேய் - மூங்கில். சூர் - அச்சம். மயிலின் தோகை போன்று சோர்ந்த கூந்தலர் என்க. திதலை - தேமல்.