உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
            குட்ட மாடிக் குளிர்ந்த வருத்தம்
           அட்டுப்பத மாக வறிந்தோ ரமைத்த
           மட்டுமகிழ்ந் துண்ணு மாந்த ரவ்வழிப்
     30    பட்ட தென்னெனப் பசும்பொனி னியன்ற
           வட்ட வள்ளம் விட்டெறிந்து விதும்பி
           எழுந்த கம்பற் கியைந்துசெல் வோரை
           அழிந்த தில்லை யறிந்தோம் யாமென
           மொழிந்திடை விலங்கி முன்னிற் போரும்
 
                      (இதுவுமது)
          27 - 34 :  குட்டம்.........முன்னிற்போரும்
 
(பொழிப்புரை) ஆழமான நீரின்கண் நெடிது ஆடி உடல் பெரிதும் குளிர்ந்தமையாலுண்டான துன்பந் தீரும்பொருட்டு நன்கு பதமாகக் காய்ச்ச அறிந்தோரால் காய்ச்சப்பட்ட கள்ளினை மகிழ்ந்துண்ணாநின்ற மாந்தர்கள் ஊர் ஆரவாரம் கேட்டவுடன் 'அந்தோ! அங்கே நிகழ்ந்தது என்னையோ?' என்று கூறிப் பசிய பொன்னாலியன்ற வட்டமான கிண்ணங்களையும் பேணாமல் விட்டெறிந்து மெய்ந்நடுங்கி ஆங்கு எழுந்த ஆரவாரத்திற்குரிய காரணத்தை அறிதற்கு மனமியைந்து போகின்றவரை வேறு சிலர், 'செல்லன்மின் யாங்கள் அறிந்து கொண்டோம்; ஆங்கு யாதொன்றும் அழிந்ததில்லை என்று கூறித் தடுத்து அவர் முன்னிற்போரும் என்க.
 
(விளக்கம்) வருத்தம்தீர்தற்கு என்க. மாந்தர்-ஈண்டுமகளிர்என்னும் பொருட்டு. விதும்பி - நடுங்கி; விரைந்துமாம். கம்பல் - கம்பலை. ஆங்கு யாதொன்றும் அழிந்ததில்லை என்க.