உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
            ஒடுவிசை வெங்காற் றுருமொ டூர்தரப்
           பாடற் றண்ணுமைப் பாணியிற் பிழையா
           தாடன் மகளி ரரங்கம் புல்லெனச்
           சுவைசோர்ந் தழிய நவைகூர்ந்து நடுங்கி
     50    மஞ்சிடைப் புகூஉ மகளிர் போலத்தங்
           கஞ்சிகை யெழினியிற் கரந்துநிற் போரும்
 
                     (இதுவுமது)
          46 - 51 :  ஓடு..........கரந்துநிற்போரும்
 
(பொழிப்புரை) தண்ணுமையோடும் தாளத்தோடும் பொருந்தக் கூத்தாடுதலையுடைய மகளிரினது கூத்தாட்டரங்கம் சுவை சோர்ந்து அழியும்படி விரைந்தோடா நின்ற வேகத்தையுடைய வெவ்விய சூறைக்காற்று இடியோசையோடு விரவி வந்து மோதுதலானே அம்மகளிர் அவ்வரங்கம் பொலிவிழந்து போம்படி துன்ப மிகுந்து மெய்ந்நடுங்கி முகிலினூடே சென்று புகுதா நின்ற வானவர் மகளிர் போலே தமது நீலத்திரைகளினூடே சென்று மறைந்து நிற்போரும் என்க.
 
(விளக்கம்) உரும் - இடியோசை. தண்ணுமை - மத்தளம். பாணி - தாளம். அரங்கம் - கூத்தாட்டரங்கம். மஞ்சு - முகில். மகளிர் - வானவர் மகளிர். மஞ்சு - நீலத்திரைக்குவமை.