உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
            காவன் மாக்களுங் காஞ்சுகி முதியரும்
           ஏவ லிளையரு மெதிரெழுந் தோடி
           மாடமுங் கடையு மதிற்புறச் சேரியும்
           ஓடெரி கவரலி னூர்புக லாகாது
     115    வையமுஞ் சிவிகையுங் கைபுனை யூர்தியும்
           காற்றுப்பொறி கலக்க வீற்றுவீற் றாயின
           போக்கிட மெங்கட்குப் புணர்க்க லாகா
           தாக்கிட மெமக்குமுண் டாக வருளி
           ஆய்ந்த நல்யாழ்த் தீஞ்சுவை யுணர்ந்தநின்
     120    மாணாக் கியையெம் மன்னவ னருளால்
           இரும்பிடி நின்னொ டொருங்குட னேற்றிக்
           கொடுக்குவ வேண்டுமென் றெடுத்தெடுத் தேத்தி
           அருந்திறற் காவல ரச்ச மெய்திப்
           பெருந்திறன் மன்னற்குப் பணிந்தன ருரைப்ப
 
            (காவலர் உதயணனிடம் கூறல்)
            111 - 124 :  காவல்..........உரைப்ப
 
(பொழிப்புரை) வாசவதத்தை முதலியோரைக்காவல்செய்திருந்த காவலரும், மெய்ப்பை புக்க முதியோரும் ஏவலிளையரும் அப்பேராற்றலுடைய உதயணமன்னனுக்கு எதிரே எழுந்து ஓடிப்பணிந்து வேந்தே! நகரத்தே மாடமாளிகைகளும் வாயில்களும் மதிலின் புறத்தேயமைந்த சேரிகளும் விரைந்து பரவாநின்ற தீ கவர்ந்து கொண்டமையாலே யாங்கள் இம்மகளிரை அழைத்துக் கொண்டு நகரத்தே புகுந்துய்யவும் இயலாதாயிற்று. மேலும் இம்மகளிர் ஊர்ந்து வந்த வண்டிகளும் சிவிகைகளும் ஒப்பனை செய்யப்பட்ட பிறஊர்திகளும் இச்சூறைக்காற்று அவற்றின் இயந்திரங்களைக் கலக்கிவிட்டமையானே நுறுங்கி உறுப்புகள் வேறுவேறாகச்சிதைந்தொழிந்தன. இம்மகளிரைப் போக்கி உய்யக் கொள்ளுதற் கேற்ற இடமும் எளியேங்களால் அமைத்தற்கியலாதாயிற்று. ஆகவே பெருமான் இவர்கட்குப் பாதுகாவலாக இயற்றுமிடத்தை எளியேங் கட்கும் காவலிடமாக இயற்றியருளி மேலும் ஆராய்ந்துணர்ந்த நின்னுடைய நல்லயாழினது இனிய சுவையினை நின்பாற் பயின்றுணர்ந்த நின் மாணாக்கியாகிய இறை மகளையும் இப்பத்திராபதியாகிய பெரிய பிடியின்மேல் நின்னோடு ஒருங்கே ஏற்றிப் பாதுகாத்து இவ்விடையூறகன்ற பின்னர் மீண்டும் எம்பால் ஒப்படைத்தருள வேண்டும் என்று அந்த அரிய திறலமைந்த காவலரும் அச்சமெய்தி வேண்டாநிற்ப என்க.
 
(விளக்கம்) காஞ்சுகி முதியோர் - மெய்ப்பையிட்ட முதுகாவலர். ஊர் - உஞ்சை. பொறி - இயந்திரம். பெருமான் இவர்க்கு ஆக்குமிடம் எமக்குமாம்படி ஆக்கி என்றவாறு. மீண்டும் எம்பாற் கொடுக்குவ வேண்டும் என்க. பெருந்திறன் மன்னன் - உதயணன்.