உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
         
     125    எவ்வா யமரு மின்மொழிக் கிளவி
           அவ்வாய் மங்கல மாகென விரும்பிக்
           கவ்வையும் பெருகிற் றுய்தலு மரிதே
           இவ்வழி மற்றிவ ணிற்றலு மேதம்
           வருக வீண்டென வத்தவன் வலிப்பத்
 
                (உதயணன் செயல்)
         125 - 129 :  எவ்வாய்...........வலிப்ப
 
(பொழிப்புரை) இவ்வேண்டுகோள் கேட்ட உதயணகுமரனும்
  இனிய மொழியினையுடைய வாசவதத்தை எவ்விடத்தே இருந்தாலும்
  அவ்விடமே நமக்கு ஆக்கமளிக்குமிடமாகும் என்று கருதி,
  அவ்வேண்டுகோளை விரும்பியேற்றுக்கொண்டு "நன்று நன்று
  அவ்வாறே செய்குவம்! இப்பொழுது ஆரவாரம் மிகவும் பெருகிற்று
  இவ்வார வாரத்திடையே இம்மகளிர் உய்தலும் அரிதேயாகும்.
  இப்பொழுது இங்கே நிற்றலும் குற்றமேயாகும் கண்டீர்! ஆகவே
  வாசவதத்தை முதலியோர் இங்கே வருவாராக!" என்று கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) எவ்வாய் - எவ்விடம். அவ்வாய் - அவ்விடம்.
  மங்கலம் - ஆக்கம். கவ்வை - ஆரவாரம். ஏதம் - குற்றம். வாசவதத்தை
  முதலியோரை ஈண்டு அழைத்து வாருங்கோள் என்பது குறிப்பு. வலிப்ப - கூற.