உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
44. பிடியேற்றியது
 
            அஞ்சி லோதியை நெஞ்சு வலியுறப்
           பயிற்சி நோக்கி னியற்கையிற் றிரியாக்
     150    காஞ்சன மாலை கையிசைந் தொருங்கே
           ஏந்தின ளேற்ற விரும்பிடி யிரீஇ
           முடியா வாள்வினை முடித்தன மின்றென
           வடியேர் தடங்கண் வாளென மிளிரும்
           கொடியேர் சாயலைக் குடங்கையிற் றழீஇப்
     155    பிடியேற் றினனாற் பெருந்தகை யுவந்தென்.
 
        
      (காஞ்சனமாலை வாசவத்தையைப் பிடியேற்றுதலும் உதயணன்
       வாசவதத்தையைத் தழுவிப் பிடிமிசையேற்றிக் கோடலும்)
            148 - 155 :  நெஞ்சு..........உவந்தென்
 
(பொழிப்புரை) வாசவதத்தையின்குறிப்புணர்ந்த தோழியாகிய காஞ்சனமாலை அவளோடு பெரிதும் பழக்கமுடைய தனது பார்வையாலேயே அவளுடைய இயற்கையான நாணிலையினின்றும் வேறுபடுவித்துத் தன் கைகளாலே அணைத்துத் தாங்கி வாசவதத்தையைப் பிடியின்மேல் ஏற்றாநிற்பப் பெருந்தகையாகிய உதயண மன்னனும் அவள் ஏற்றுதற்கிமையத் தனது பெரிய பிடியானையை அசையாமே நிறுத்தி "முடித்தற்கரிய நமது ஆள்வினையொன்றனை இன்று செய்து முடித்தேம்" என்று பெரிதும் உவந்து மாவடுப் போன்ற பெரியதன் கண்கள் வாள்போன்று மிளிராநின்ற பூங்கொடிபோலும் சாயலையுடைய அவ்வாசவதத்தையைத் தனது குடங்கையிலே தழுவிப் பிடியின் மேலேற்றியருளினன் என்க.
 
(விளக்கம்) பயிற்சிநோக்கம் - பெரிதும் பழகிய பார்வை. திரியா-திரித்து. பிடியை இரிஇ-என்க. முடியா-முடித்தற்கரிய என்க. வடி - மாவடு. குடங்கை - வளைந்தகை. பெருந்தகை - உதயணன்.

44. பிடியேற்றியது முற்றிற்று.