(விளக்கம்) புன்கண்
- துன்பம். உங்கள் அன்பு - உம்மினத்தின்பால் யான் இயல்பாகவே
கொண்டுள்ள அன்பு என்க. உங்கள் அன்பின் யான் உறுநோய்
என்றது, தெய்வயானை காரணமாகத் தான் சிறைக்கோட்டம் புக்கதனை.
அன்புடைமை தோன்றத் தறுகண்வேழம் என்னாது பைங்கண் வேழம் என்றான்.
வேழம் ஈண்டு நளகிரி, தன்னை யானை முன்போக்கிய செயலுக்கு
அற்றைநாள் வாசவதத்தை பரிந்து கண்ணீருகுத்தமையைத் தானும்
அறிந்திருந்தமையால் உண்ணெகிழ்ந்து கழிந்த நோக்கு என்றான். உறா
அநோக்கு, அயலாரை நோக்குமாறு நோக்கும் நோக்கம்.
அந்நோக்கமே அவள் குறிப்பினைத் தான் உணர்தற்கு ஏதுவாய்த் தன்னை
வருத்திற்று என்பான் உறாஅநோக்கின் கடுநோய் கைவருகாலை என்றான்.
இக்கருத்தோடு
"ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள" (குறள்-1099)
எனவும், "செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போ
னோக்கும் உறாஅர்போன் றுற்றார் குறிப்பு" (குறள் -
1097)
எனவும் வரும் திருகுறள்களையும் ஒப்பிடுக. தீர்திறம், நோய்
தீரும் வழி. அஃதாவது வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னூர்க்குப்
போதலாகிய இவ்வழி என்றவாறு. வழிமொழி, வேண்டுகோள்.
|