உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            அரதன நாகரிற் சொரிதரு வெகுளியர்
           ஏற்றோர்த் தாக்கிக் கூற்றுறை யுலகினுள்
     15     உறைகுவி ராயிற் குறுகுமின் விரைந்தெனச்
           சிறையழி புனலிற் சென்றுமே னெருங்கி
           வேலுங் கணையமும் வீழினு மிமையார்
           வீரியத் தறுகணர் வீக்கிய கச்சையர்
           ஆர்வ லாள ரார்த்தன ரெறிய
 
                  (இதுவுமது)
             13 - 19: அரதன...........எறிய
 
(பொழிப்புரை) மணியையுடைய நாகர் போன்று உமிழா நின்ற சினத்தீயையுடையராய்த் தம்மை எதிர்த்துப் போர்செய்த மறவரையெல்லாம் கொன்று வீழ்த்தி, மேலும், 'கூற்றுவன் உறைகின்ற உலகிலே உறைதற்கு விரும்புவீர் ! உளீராயின் எம் முன்னே அணுகுமின் !' என்று ஆரவாரித்து அணையை உடைத்து மண்டும் வெள்ளம் போன்று பகை மறவர்மேல் விரைந்து சென்று பொருது அப்பகை மறவர் எறியா நின்ற வேற்படையும் எய்யும் கணையமும் வந்து தைப்பினும் கண்ணிமைத்தல் செய்யாத மறத்தறுகண்மை யுடையராய்க் கச்சினை மேலும் இறுகக் கட்டியவராய்ப் போர் செய்தலின்கண் பேரார்வமுடைய அவ்வத்தவ வித்தக மறவர் ஆரவாரித்துப் படைக்கலம் வீசுதலானே என்க.
 
(விளக்கம்) அரதனம் - மணி. நாகராகிய மறவர் போன்றென்க. திறை - அணை. வேலும் கணையமும் வீழினும் இமையார் என்பதனோடு 'விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்கணவர்க்கு' என வரும் திருக்குறளையும் நினைக. கணையம் - கணை அமைப்பு. ஆர்வலாளர் - போர்செய்தற்கண் ஆர்வ மிக்கோர்.