உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            மத்தகத் திழிதரு நெய்த்தோர்ப் பெரும்புனல்
           மொய்த்துமுகம் புதைதலின் முன்னடி காணார்
           மடித்த செவ்வா யழுந்தக் கவ்விப்
           பிடித்த வாளொடும் பிறழ்ந்தனர் கவிழவும்
     40    கையொடு துமித்த வைவாள் வாய்மிதித்
           தற்ற வடியினர் செற்றத்திற் கழுமிக்
           கற்ற கரண மற்ற வாக
           உரத்தகை மழுங்கி யுள்ளடி யின்றி
           மரக்காற் கூத்தரின் மறிந்தனர் விழவும்
 
                   (இதுவுமது)
             36 - 44: மத்தக..........விழவும்
 
(பொழிப்புரை) நெற்றியிலே படைக்கலம் பட்டமையாலே வழிகின்ற குருதியாகிய மிக்க நீர் மொய்த்துத் தமது முகத்தை மறைத்தமையாலே, முன்னரிடும் அடியைக் காணமாட்டாராய்ச் சினத்தாலே மடித்த தம் உதடுகளில் எயிறு அழுந்தும்படி கௌவித் தாம் பிடித்திருந்த வாட்படையோடும் புரண்டு முகம் கவிழ்ந்து வீழாநிற்பவும், தமது கையோடு துணித்து வீழ்த்தப்பட்ட தமது கூரிய வாளின் வாயிலே மிதித்தமையாலே அடியற்றுப் போனவர் சினத்தாலே நிறைந்து தாம் கற்றிருந்த போர்த்தொழிலும் கைகூடாவாக வலியும் தகுதியும் குன்றித் தமது உள்ளங்காலுமின்றி மரக்கான் மேனின்றாடுங் கூத்தர் வீழுதல் போன்று திரும்பி வீழாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) மத்தகம் - நெற்றி. நெய்த்தோர் - குருதி. முன்னரிடும் அடி என்க. அடியிடும் இடத்தைக் காணமாட்டாராய் என்பது கருத்து. செற்றம் - சினம். கரணம் - தொழின் முறை. மரக்கான் மேலேறி நின்றாடும் கூத்தர் என்க