உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            தமரது வென்றியுந் தருக்கு நிலைமையும்
           அரிய தோழன் சூழ்ச்சிய தமைதியும்
           எய்திய வின்பமுங் கையிகந்து பெருக
     130    வையக வரைப்பின் வத்தவ ரிறைவற்
           கெவ்வந் தீர்க்கென விமையோ ரியற்றிய
           தெய்வத் தன்ன திண்பிடி கடைஇ
           மன்னிய தோற்றமொடு வடகீழ்ப் பெருந்திசை
           முன்னிய பொழுதின் முன்னாங் கூறிய
 
            (உதயணன் மகிழ்ந்து செல்லுதல்)
             127 - 134: தமரது...........பொழுதின்
 
(பொழிப்புரை) பின்னர் உதயணகுமரன் தன் தமராய மறவரின் போர்வெற்றியினையும் அவரது செருக்குற்ற நிலையினையும் பெறற்கரிய தன் தோழனாகிய யூகியினது சூழ்ச்சியினது சிறப்பினையும் வாசவதத்தையைக் கைப்பற்றித் தான் கருதிய வினை முடித்தமையையும் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் எய்திய இன்பம் மேலும் மேலும் எல்லையின்றிப் பெருகா நிற்ப இவ்வுலகத்தே வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணனுக்கு எய்திய துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டே தேவர்களாலே படைக்கப்பட்ட தொரு தெய்வத்தையே ஒத்த திண்ணிய அப்பிடி யானையை ஊக்கத்தோடு செலுத்தி மனவமைதியுற்றதொரு தெளிந்த தோற்றத் தோடே தந்நாடிருக்கும் வட கீழ்ப் பெருந்திசையை நோக்கியபொழுது என்க.
 
(விளக்கம்) தமர் - தன்மறவர். தருக்கு - செருக்கு. தோழன்: யூகி. எவ்வம் - துன்பம். மன்னிய தோற்றம் - மனவமைதியுற்ற தோற்றம்.