உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            எறிபடைத் தானை யேயர் பெருமகன்
     140    உறுபடை யில்லா வொருதிசை காட்டி
           ஆற்றலும் வென்றியு மறிவு மூன்றும்
           கூற்றுத்திறை கொடுக்குங் கொற்றத் தானை
           அவந்தியர் பெருமக னடிமுதல் குறுகிப்
           பயந்துதான் வளர்த்த பைந்தொடிப் பாவையைச்
     145    சிறையிவ னென்னுஞ் சிந்தையி னீக்கிக்
           குறையுடை யுள்ளமொடு கொள்கெனத் தந்துதன்
           காதலின் விடுப்பப் போகுதல் வலித்ததென்
 
                  (இதுவுமது)
          139 - 147: எறிபடை........வலித்தனென்
 
(பொழிப்புரை) பகைவரைக் கொல்லும் படையையுடைய ஏயர் குலத் தோன்றலாகிய உதயணன் கண்டு அவ்வராகனுக்கு மிக்க படையில்லாததும் பிரச்சோதன மன்னன் இருந்ததும் ஆகிய அவ்வொரு திசையினைச் சுட்டிக்காட்டி 'வீரனே! அங்குச் செல்! ஆற்றற்கும் வெற்றிக்கும் அறிவுடைமைக்கும் அஞ்சிக் கூற்றுவனே திறை கொடுக்கும் சிறப்புடைய வெற்றிமிக்க படையினையுடைய அவந்தி நாட்டரசனாகிய பிரச்சோதனன்பாற் செல்க! சென்று, நோன்பு செய்து அம்மன்னன் ஈன்று வளர்த்த பசிய தொடியணிந்த கொல்லிப் பாவை போன்ற வாசவதத்தையை இவ்வுதயணன் நம்பாற் சிறைப்பட்டவன் என்னும் இளிவரவினைத் தன் நெஞ்சத்தினின்றும் அகற்றி எனக்கே கொடுக்கவேண்டும் என்னும் ஒரு குறை கிடந்த நெஞ்சத்தினால் இவளை நின் பிடியின் மேல் ஏற்றிக்கொள்க! என்று இரந்தும் வழங்கித் தனது அன்புடைமையாலே விடுத்தனன்காண்! அம்மன்னன் கருத்திற்கிணங்கவே யான் இவளோடும் என் ஊர்க்குச் செல்லத் துணிந்தேன்காண்! என்க.
 
(விளக்கம்) ஏயர் பெருமகன்: உதயணன். உறுபடை - மிக்க படை. படையில்லா வொருதிசை என்றது பிரச்சோதனனிருந்த திசை என்க. பின் வருகின்ற வராகனுக்கு ஈண்டு வராதேகொள் ஆங்குச் செல் என ஒரு திசையினைச் சுட்டிக்காட்டிக் கூறினன் என்பது கருத்து. அஞ்சுவோர் திறைகொடுத்தல் இயல்பாகலின் இவன் படைக்குக் கூற்றும் திறைகொடுக்கும் என்றான். அவந்தியர் பெருமகன்: பிரச்சோதனன். குறை - காரியம்.