உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            வணக்க மின்றியான் செய்தனன் றனக்கெனக்
           கூறினை சென்மெனத் தேறக் காட்டிப்
     150    படிறிடை மிடைந்த பணிகோ ளீயா
           ஆன்பாற் செந்தேத் தணியுறு கிளவி
           அடுதிற லாற்ற லறியக் கூறப்
           பிடிவழிப் படர்ந்து பெயர்ந்தவ னிற்பத்
 
                  (இதுவுமது)
           148 - 153: வணக்கம்.........நிற்ப
 
(பொழிப்புரை) ஆதலாலே இன்று அம்மன்னனுக்கு யான் செய்ந்நன்றி குறித்து வணக்கம் செய்தேன் என்று அம்மன்னன்பாற் கூறிச்செல்வாயாக! என்று தன் கருத்தினை அவ்வராகன் நன்கு தெளிந்து கொள்ளும்படி சொல்லிக்காட்டி வஞ்சம் கலந்த தனது வணக்கத்தைப் புலப்படுத்தி ஆவினது பாலில் செந்தேன் கலந்ததுபோன்று இனிக்கும் அழகுடைய சொற்களை அவ்வுதயணகுமரன் அவ்வராகன் தனது செயலை அறியும்படி கூற அது கேட்டலும் பிடியின் பின் தொடர்ந்து வந்தவனான வராகன் வாளாநிற்ப என்க.
 
(விளக்கம்) சென்ம் - செல். படிறு - வஞ்சம். பணிகோள் - தனது பணிவுடைய கொள்கையை. பாலும் செந்தேனும் ஒத்த அணியுறு கிளவி என்க. அடுதிறல்: அன்மொழி.