உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            தொடியுடைத் தடக்கையிற் றொழுதன ளிறைஞ்சி
     155    மீட்டவற் போக்கு மாற்றங் கேட்டே
           மணிமுதற் கொளீஇய மாண்பொற் சந்தின்
           எரிமணி யிமைக்கு மிலங்குபொற் கோணத்துக்
           கதிர்நகைக் கோவைக் கைவினைப் பொலிந்த
           மத்தகப் புல்லக நக்குபு கிடந்த
     160    திலகத் திருநுதல் வியர்பொடித் திழியக்
           கலக்குறு சின்னீர்க் கருங்கயல் போல
           நிலைக்கொளல் செல்லா நீர்சுமந் தளைஇப்
           பிறழ்ச்சியொ டுலாவும் பெருமதர் மழைக்கண்
           அச்ச நோக்கி னச்செயி றணிந்த
     165    நாகப் பிள்ளை யங்கட் பிறந்த
           ஆவி போல வைதுவெய் துயிராப்
           பருவர லுறாஅப் பையு ணெஞ்சினள்
           கண்டிரள் வேய்த்தோட் காஞ்சன மாலையைக்
           கொண்டிழி கென்னுங் குறிப்பினள் போலச்
     170    செவ்வி யின்றிச் சேயிழை புலம்ப
 
                  (வாசவதத்தை வருந்தல்)
                  154 - 170: தொடி.........புலம்ப
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணகுமரன் மன்னவன் இருந்த திசை நோக்கித் தொடியணிந்த தன் பெரிய கைகளைக் குவித்து வணங்கி வராகனை மீண்டுபோகும்படி கூறிய சொற்களைக் கேட்டவுடன், வாசவதத்தை மணிகள் பதித்த மாண்புடைய பொன்னாலியன்ற மூட்டுவாய்களையுடைய ஒளி மணிகள் சுடராநின்ற விளங்காநின்ற பொன்னாலியன்ற கோணங்களையும் உடைய ஒளியுடைய முத்துமாலையும் கைத்தொழிற் சிறப்பாலே பொலிவு பெற்ற தலையணியாகிய புல்லகமும் விளங்கிக்கிடந்த தனது திலகமுடைய அழகியநெற்றியின்கண் வியர்வைநீர் முகிழ்த்துச் சொட்டா நிற்பக் கலக்குண்ட சிறிய நீரிடையகப்பட்ட கரிய கயல்மீன்கள் போன்று தனது பெரிய மதர்ப்புடைய குளிர்ந்த கண்கள் நிலை பெறமாட்டாவாய்க் கண்ணீரைச் சுமந்து பிறழ்ந்துலாவாநின்ற அச்சமுடைய பார்வையோடு நச்சுப் பற்களையுடைய பாம்புக் குட்டியின்பாற் றோன்றாநின்ற மூச்சுப் போன்று மெல்லிதாகவும் வெய்தாகவும் உயிர்த்துத் துன்பமுற்ற வருத்தத்தையுடைய நெஞ்சினளாய்க் கணுக்களோடு திரண்ட மூங்கில்போலும் தோளையுடைய காஞ்சனமாலையை, என்னைக் கைப்பற்றிக்கொண்டு யானையினின்றும் இறங்குவாயாக! என்னும் குறிப்பினோடு நோக்கி உடன்பாடின்றி வருந்தாநிற்ப என்க.
 
(விளக்கம்) அவன்: வராகனை - மாற்றம் - மொழி மாற்றம். சேயிழை (170) கேட்டென்க. சந்து - மூட்டுவாய். புல்லகம் - தலையணியிலொன்று நாகப்பிள்ளை - பாம்புக்குட்டி. ஆவி - மூச்சு, ஐது - மெல்லிதாக. பையுள் - வருத்தம். கண் - கணு செவ்வி - உடன்பாடு.