உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
             மறுவகத் தடக்கிய மதியம் போலச்
            சிறுமுகச் சிகழிகை புடைமுதல் புதைஇய
     235    செம்பொற் பட்டம் பின்றலைக் கொளீஇச்
            சில்லென் கோலத்துச் சிறுகொடி மருங்கிற்
            றனிமுத் தணிந்த தண்சாந் தாகத்துப்
            பனிமுத் தாலி படைக்கண் கால
            வெள்ளிப் போழை யுள்ளகத் தடக்கி
     240    மணியினும் பொன்னினு மருப்பினும் வல்லவர்
            அணிபெறப் புனைந்த வமர்பெறு காட்சித்
            தின்மை செறிவில் சேடக மகளிர்
            தன்மை கடுக்குந் தானைக் கச்சையர்
            வம்புநெருக் குற்ற பொங்கிள முலையர்
     245    குவளைக் கோதை கொண்ட கூந்தலர்
            தவளைக் கிண்கிணி ததும்புசீ றடியர்
            விளக்குறு மணிக்கை முகட்டுமுதல் வளைத்த
            பொங்குமயிர்க் கவரிப் பைந்தொடி மகளிர்
            எரியுறு மெழுகி னுள்ளஞ் சோரப்
     250    பரிவுறு நெஞ்சினர் பையாந் தேங்கவும்
 
             (கவரியேந்தியவர் வருந்தல்)
              231 - 250: மறு..........ஏங்கவும்
 
(பொழிப்புரை) விளக்கமுற்ற மணிகள் பதித்த கைப்பிடியினை முகட்டின் கண் வளைந்து இயற்றப்பட்ட மிக்க கவரிமான் மயிராலியற்றிய சாமரையை யேந்திய பசிய தொடியணிந்த பணி மகளிர் களங்கத்தை அகத்தே அடக்கிய திங்கள் போன்று சிறிய முகத்தையுடைய மயிர்முடியின் பக்கங்கள் மறையும்படி அகத்திட்டு மறைத்த மல்லிகை மலரானியன்ற நறிய சூட்டாகிய மாலை வெண்மையுடையதாக விளங்கா நிற்பவும், அத்திங்களைச் சூழ்ந்த ஊர்கோள்போன்று அச்சூட்டையும் சுற்றிவளையும்படி செம்பொன்னாலியன்ற பட்டத்தைத் தலையின் பின்பக்கத்தே செருகிச் செய்த கண்டோர்க்குச் சில்லென்று மயிர்க்கூச்செறிதற்குக் காரணமான தலைக்கோலத்தினையும், சிறிய பூங்கொடி போன்ற இடையினையும், ஒற்றை முத்துவடம் அணிந்த தண்ணிய சந்தனம் பூசிய மார்பினையும், வெள்ளித்த கட்டினை அகத்தே அமைத்து மணியினானும் பொன்னானும் யானை மருப்பினானும் தொழில் வல்லோர் அழகுண்டாக இயற்றிய கேடகத்தை யேந்திய போர்த் தொழிலைப் பெற்ற காட்சியையும், தீமை செறிதலில்லாமையையும் உடைய கேடகமகளிரின் தன்மையை ஒத்த படைஞர்க்குரிய கச்சையினை அணிந்தவரும், முலைக்கச்சிறுக்கினமையாலே நெருக்குற்ற பருத்த இளமுலையினையுடையவரும், குவளைமலர் மாலை சூட்டிய கூந்தலை யுடையவரும், தவளைவாய் போன்ற வாயையுடைய கிண்கிணி முரலும் சிறிய அடியினை யுடையவருமாகத் தம் வாட்படை போன்ற கண்கள் துன்பக்கண்ணீர்த் துளியை முத்து முத்தாக உகுப்பத்தீயிலிட்ட மெழுகெனத் தமது உள்ளம் நெகிழ்ந்து ஒழுகா நிற்பவும் இரக்கமிக்க நெஞ்சினையுடையராய்த் துன்புற்று ஏங்கியழா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) மயிர்முடியை அகத்திட்டுச் சுற்றிய மல்லிகை மாலை வளையத்திற்கு மறுவினை அகத்தடக்கிய திங்கள்மண்டிலம் உவமை. ஊர் கோள் அதனைச் சுற்றி வளைத்த பொற்பட்டத்திற்குவமை என்க. சில் - தேருருளையுமாம். தனிமுத்து - ஒற்றை வடமாகிய முத்துமாலை. முத்துப்போன்ற ஆலியுமாம். சேடமகளிர் - அரண்மனை மகளிரைக் காத்தற்குக் கேடகந் தாங்கும் மகளிர். கேடகமகளிரின் தன்மையை ஒத்த மகளிர் என்க. பையாந்து - துன்புற்று.