உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
             கன்மிசை மருங்கின் மின்மிளிர்ந் ததுபோற்
            றிடர்சே ராகத்துச் சுடர்மணி பிறழ
            முத்துற ழாலி தத்துறு கண்ணொடு
            பனிப்புறு கிளவியிற் பக்க நோக்கி
     255    மங்கலச் செப்பின் மாண வேந்திய
            குங்குமங் கொண்ட கூன்வழுக் குறவும்
 
             (பணிசெய்யுங் கூனர் வருந்துதல்)
              251 - 256: கன்மிசை..........குறவும்
 
(பொழிப்புரை) கல்லின் மேலே மின்னல் தவழ்ந்தாற்போன்று கூனாகிய திடர் சேர்ந்த தமது மேனியிலே சுடரா நின்ற மணிமாலை பிறழா நிற்ப, முத்துப் போன்ற கண்ணீர்த்துளிகள் துளியா நின்ற கண்களோடும் நடுக்கமுடைய சொற்களோடும், மங்கலமான செப்பின்கண் மாண்புற ஏந்திய குங்குமத்தைக் கைக்கொண்ட கூனராகிய பணிமாக்கள் நான்கு பக்கங்களையும் நோக்கி நோக்கித் துன்புறா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) கல் - மலையுமாம். திடர் - மேடு. அஃதாவது கூனாகிய மேடு என்றவாறு. உறழ - ஒத்த. ஆலி - நீர்த்துளி. பனிப்பு - நடுக்கம். கூன் - கூனர். வழுக்குறுதல் - துன்புறுதல்.