உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
             அருங்கலந் துதைஇப் பெருங்கல மெல்லாம்
            பேணி யணிந்த நாணுக் கோலத்துப்
            பையர வல்குற் பவழப் பல்காசு
     260    கைபுனை கலிங்கத் தைதுகலந் தொன்றி
            நீலத் தெண்ணீர் நீந்து மாமையிற்
            கோலக் குறுக்கைவாள் கூட்டுட் கழீஇப்
            பாலிகை பற்றிய குறள்வழிப் படரவு
 
            (பணிசெய்யும் குறளர் வருந்துதல்)
             257 - 263: அருங்கலம்..........படரவும்
 
(பொழிப்புரை) அரிய சிற்றணிகலனெல்லாம் நிரம்ப அணிந்து பின்னரும் பேரணிகலன்களையும் விரும்பியணிந்த கண்டார் நாணுதற் கேதுவான ஒப்பனையுடனே, பாம்பின் படம் போன்ற அல்குலின் மேலணிந்த பவழத்தாலியன்ற மேகலையோடு ஒப்பனை செய்யப்பட்டு உடுத்திய நீல ஆடையினூடே அழகாக ஒன்றி நீல நிறமுடைய தெளிந்த நீரினூடே நீந்தா நின்ற ஆமைகளைப் போன்று தமது அழகிய குறுகிய கைவாளைக் கூட்டினின்றும் உருவி அதன் பிடியைப் பற்றியேந்திய குறளாகிய பணிமகளிர் வாசவதத்தை பிரிவின் வழிப் பெரிதும் துன்புறா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) அருங்கலம் - விலைமிக்க அணிகலம். பெருங்கலம் - பேரணிகலம். கோலம் - ஒப்பனை. கலிங்கம் - ஆடை ஈண்டு நீலத் தெண்ணீரை உவமித்தமையால் நீலவாடையென்க. நீல ஆடை சுற்றிய குறளர் அவ்வாடையாலே பெரிதும் மறைப்புண்டு இயங்குதலின் நீலத்தெண்ணீரிடை நீந்தும் ஆமை போன்றென இனிதின் உவமை எடுத்தோதினர். படர - துன்புற. படர் - துன்பம்.