உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
             மணிகிடந் திமைக்கு மாட மாணகர்
     265    அணிகிடந் திமைக்கு மகன்பெருங் கோயிலுட்
            காப்புற வகுத்த கன்னியங் கடிமனை
            யாப்புற வகுத்த போர்ப்பெருங் கோணத்துக்
            கழறுகா லமைத்துக் கண்ணகன் பரப்பின்
            நிழறரு படுகா னீரதிற் புனைந்த
     270    கற்பிறங் கடுக்கத்து நற்குறி யாவையும்
            படுகற் சுரமும் பாறையும் படுவும்
            நடுக லடுக்கலு நறும்பூஞ் சாரலும்
            தேனுடை வரையுங் கானகக் குறும்பும்
            அருவி யறையு முருவ வேனலும்
 
             (தோழியர் புலம்பல்)
           264 - 274: மணி..........ஏனலும்
 
(பொழிப்புரை) 'மணிகள் மிகுந்துகிடந்து ஒளிரா நின்ற மாடங்களையுடைய மாண்பமைந்த உஞ்சை நகரத்தே, அழகு தங்கிக் கிடந்து ஒளிரா நின்ற அகன்ற பெரிய அரண்மனைக்கண் காவல் பொருந்தும்படி அமைத்த கன்னிமாடமாகிய அழகிய விளக்கமமைந்த இல்லத்தோடு இயைபுண்டாகப் பொருத்தப்பட்ட பெரிய மூலையின்கண் கழறுகால் நாட்டி இடமகன்ற நிலப்பரப்பின் கண் நீழலிடுகின்ற படிக்கட்டுகளைப் பண்புற இயற்றிய மலைகள் விளங்கா நின்ற மலைச்சாரலின்கண் உளவாகிய நல்ல அடையாளப் பொருள்கள் அனைத்தையும்; அவையாவன: படுக்கையான கல் வழிகளும், பாறைக்கறைகளும், சுனையும், குத்துக்கற் செறிவும், நறிய மலரை யுடைய மலைச்சாரலும் தேனிறால் தூங்கா நின்ற மலைகளும் காட்டகத்ததாகிய குறும்பு என்னும் பாலை நிலத்தூர்களும் மலையருவிகளும் நிறமிக்க தினைப்பயிரும்' என்க.
 
(விளக்கம்) மணிகள் மிகுந்து கிடந்து இமைக்கும் நகர் என்க. அணி - அழகு. கோயில் - அரண்மனை. கன்னியங்கடிமனை - கன்னிமாடம். கழறுகால் - உட்புகுவோரை அச்சுறுத்திப் புகாமற் செய்யும் கழற்றுரைகள் பொறித்த தூண் என்க. (இக்காலத்து அறிவிப்புப் பலகைகள் போன்றவை) படுகால் - படிக்கட்டு. நீரதின் - நீர்மையோடு, பண்போடு நற்குறிகள் அனைத்தும் என்று தொகுத்துக் கூறியவர் பின்னர் விரித்து ஓதுகின்றார். படுகற்சுரம் - தானே தோன்றிய கல்நெறி எனினுமாம். படு - மடு. குறும்பு - பாலைநிலத்தூர். ஏனல் - தினை.