உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
             அம்பொன் வள்ளத் தமிழ்துபொதி யடிசில்
     295    கொம்பி னொல்கிக் குறிப்பிற் கொள்ளாய்
            செம்பொற் கிண்கிணி சிலம்பொ டார்ப்ப
            மணிநில மருங்கிற் பந்தொடு மறலிநின்
            அணிவளைப் பணைத்தோ ளசைய வாற்றாய்
            இன்றீங் கிளவி யொன்றிரண்டு மிழற்றிப்
     300    பண்சுவைத் தொழிந்து பாலி றோன்முலை
            ஒண்முக விரலிற் கண்முக ஞெமிடி
            மையார் நெடுங்கண் மாலை யாமத்துப்
            பையாந்து பொருந்திப் பள்ளி கொள்வோய்
            காதற் காளை கானத் தொய்ப்பப்
     305    போதற் கண்ணே புரிந்தனை யோவெனச்
            செவிலித் தாய ரவலித் தழவும்
 
                 (செவிலித்தாயர் புலம்பல்)
              294 - 306: அம்பொன்..........அழவும்
 
(பொழிப்புரை) செவிலித்தாயர் ''அருமை மகளே! நீதானும் அழகிய பொற்கிண்ணத்தே யாங்கள் பால் பெய்து குழைத்த அடிசிலை உண்ணென்று ஊட்டுங்காலத்தே பூங்கொம்பு போன்று ஒல்கி ஓடி உண்ணேன்! என்று தலையை அசைத்துக் குறிப்பாக மறுப்பாயே! செம்பொன்னாலியன்ற கிண்கிணியும் சிலம்பும் ஆரவாரிக்கும் படி மணிபதித்த களத்திலே நீ பந்தோடு எதிர் நின்று ஆடுங்கால் நின்னுடைய அழகிய வளையலணிந்த மூங்கில் போன்ற தோள்கள் மெலியா நிற்றலையும், பொறாஅயாய் இனிய தீவிய மொழிகள் ஒரு சிலவே மொழிந்து யாங்கள் பாடாநின்ற பண்ணைச் சுவைத்துப்பின்னர் அதனையும் விடுத்துப் படுக்கையின்கண் எம்முடைய பாலில்லாத வறியமுலைக்கண்ணை ஒளியுடைய நுனியையுடைய நின் விரல்களாலே நெருடித் துயிலால் மயங்கி மாலைக்குப் பின்னதாகிய யாமத்தே மையுண்ட கண்இமைகள் பொருந்தப்பட்டுத் துயிலும் மெல்லியல்புடையோயே! இத்தகைய நீ நினது காதற்குரிய காளைபோல்வான் நின்னைக் காட்டினூடே செலுத்தாநிற்ப அவனோடு போதலை விரும்பினையே? என்று வருந்தியழா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) அமிழ்து - பால். மறலுதல் - பந்தினை எதிர்த்துப் புடைத்தல். அசைய - மெலிய யாங்கள் பாடும் பண்ணைச் சுவைத்தென்க. ஞெமிடி - நெருடி. காளை - உதயணன். ஒய்ப்ப - செலுத்த. அவலித்து - வருந்தி.