உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            கற்ற மந்திரி காட்டவுங் காணாது
           பெட்டாங் கொழுகும் பெருமகன் போலவும்
           முறைமையிற் றேயு நிறைமதி நீர்மை
     310    நண்புகொ ளொழுக்கி னஞ்சுபொதி தீஞ்சொல்
           வளிஇய மடந்தையைத் தெளிவன னொழுகி
           வெறுக்கை யின்மையிற் றுறக்கப் பட்ட
           இளையவன் போலவுங் கிளைஞரும் பிறரும்
           கண்டவ ரெல்லாங் கையெறிந்து நகூஉம்
     315    கம்பலைப் பெரும்பழி யெய்திய காவலன்
           வம்ப மன்னனை வழிதெளிந் தனனென
           வெண்ணரை சூழ்ந்த தண்ணுமைப் பறைதலைக்
           காஞ்சுகி முதியர் சாய்ஞ்சஞ ரெய்தவும்
 
              (காஞ்சுகி முதியோர் வருந்தல்)
               307 - 318: கற்ற..........எய்தவும்
 
(பொழிப்புரை) வெள்ளிய நரைமயிர் சூழ்ந்த குடமுழவு போன்ற தேய்ந்த தலையையுடைய காஞ்சுகிமுதியோர், 'அந்தோ நம் மன்னன் நூல்கள் நன்கு கற்ற அறிவுடைய அமைச்சன் நன்னெறியினை நன்கு காட்டாநிற்பவும் அவற்றைத் தனது பொச்சாப்பினாலே காணாமல் தான் விரும்பியபடியே ஒழுகாநின்ற பேதையாகிய ஒரு மன்னவன் போன்றும்; பின்னர் நாடோறும் முறையே தேயும் இயல்புடைய நிறைத்திங்கள் போன்று நாடோறும் தேயும் நீர்மையையுடைய நட்பினைக்கொண்ட வஞ்சக ஒழுக்கத்தினாலும் அகத்தே நஞ்சுபோன்ற தீங்கினைக்கொண்ட கேட்டற்கினிய சொல்லாலும் தன்னைத் தடுத்துப்பிணித்துக்கொண்ட பரத்தையை நம்பி ஒழுகிப் பின்னர் தன்பாற் பொருள் இன்மை காரணமாக அப்பரத்தையாற் கைவிடப்பட்ட ஓரறிவிலியாகிய இளமையுடைய ஆடவன் போன்றும் உறவினரும் பிறரும் ஆகிய கண்டோரெல்லாம் கை தட்டி நகைத்தற்குக் காரணமான ஆரவாரத்தையுடைய பெரிய பழியினை எய்துதற்கன்றோ புதியவனாகிய ஏதின்மன்னன் ஒருவனை நன்கு தேராது தெளிவானாயினன்' என்று நிலத்திலே வீழ்ந்து துன்புறாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) நம் காவலன் பெருமகன் போலவும் இளையவன் போலவும் பழி எய்துதற்கு வம்பமன்னனைத் தெளிந்தனன் என்றென்க. பெட்டாங்கு - விரும்பியபடியே. பெருமகன் - அரசன். 'மதிப் பின்னீர பேதையர் நட்பு' என்னும் திருக்குறளையும் (782) நினைக. மடந்தை; ஈண்டுப் பரத்தை. வெறுக்கை: பொருள். எய்திப: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். தண்ணுமை - குடமுழா. பறைதலை - வினைத்தொகை. சாய்ஞ்சு - சாய்ந்து. அஞர் - துயர்.