உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
             வேக வேந்தன் வெஞ்சம முருக்கிப்
            போக வேந்தனைப் போகப் பண்ணிப்
            பொருபடை பரப்பி யுருமறைந் துழிதரும்
            யூகி யுள்வழி யொற்றுந ளெய்தி
     330    ஆகுபொரு ளோலையி னிருவரு மறிவுற்றுக்
            கண்கூ டெய்துங் காலங் கூறி
            மண்கூட் டாளன் மனைவயின் மறையவும்
 
                    (இதுவுமது)
             326 - 332: வேக..........மறையவும்
 
(பொழிப்புரை) சினமிக்க பிரச்சோதன மன்னன் மறவரை வெவ்விய போர்த்தொழிலாலே அழித்து இன்ப நுகர்ச்சிக்குரிய வேந்தனாகிய உதயண குமரனை வாசவதத்தையோடு ஊருக்குச் செல்லும்படி செய்து ஆங்காங்குத் தன் போர்ப்படையைப் பரப்பி வைத்துத் தன்னுருக்கரந்து திரியாநின்ற யூகி என்னும் அந்த அருமதியமைச்சன் இருக்குமிடத்தை ஆராய்ந்து அறிந்து அவன்பாற் செல்லாநிற்ப; அவ்வழி யூகியும் சாங்கியத்தாயும் தத்தமக்கு உதயணகுமரன் ஈந்தபின்னர் நிகழவேண்டிய செயல்களை எழுதிய ஓலையின் உதவியாலே ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்துகொண்டு தாம் ஒருவரை ஒருவர் மீண்டுங்காண்டற்குரிய காலத்தையும் குறிப்பிட்டுக் கூறிக்கொண்ட பின்னர் அவருள் சாங்கியத்தாய் நண்பனாகிய ஒரு குயமகனில்லத்தே சென்று மறைந்துறையாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) வேகவேந்தன் என்றது - பிரச்சோதனனை. போகம் - இன்பம், இன்பம் நுகர்தற்குரிய வேந்தனை என்க. ஒற்றுநள் - ஆராய்ந்து. கண்கூடு எய்துங்காலம்: காணுங்காலம். மண்கூட்டாளன் - குயவன்.