உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           ஈரிதழ்த் தாரோ யிற்றை நாளால்
           காரொ டுறந்தவிக் கடுவளி நிமித்தம்
           ஊரொ டுறந்த வுறுகண் காட்டி
           இன்னா வின்ப நின்வயிற் றருமெனத்
     15    தொன்னூ லாளன் றோன்றக் கூற
 
           (நிமித்திகன் பிரச்சோதனனுக்குக் கூறல்)
             11 - 15: ஈரிதழ்..........கூற
 
(பொழிப்புரை) இவன் இங்ஙனம் கூறி நின்றுழி, ஆண்டு அரசன் பாலிருந்த நிமித்திகன் நிகழ்ந்த நிமித்தங்களை ஆராய்ந்து மன்னனை நோக்கி "ஈரிய இதழ்களையுடைய மலர்மாலையினையுடைய எம்பெருமானே! முகிலோடு சேர்ந்து மிக்குவந்த இந்தச் சூறைக் காற்றை நிமித்தமாகக் கொண்டு காணுங்கால் இற்றைநாள் நமது நகரத்திலே மிகுந்த துன்பத்தைத் தொடக்கத்தே உண்டாக்கிய இன்னாமையை யுடைய இன்ப நிகழ்ச்சியொன்றனை நின்பால் தோற்றுவித்தல் வேண்டும் என்பது தேற்றம்" என்று பழைய நிமித்த நூற்பயிற்சியுடைய அந்நிமித்திகன் விளங்கும்படி கூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) உறந்த - மிகுந்த. கடுவளி - சூறைக்காற்று. ஊர் - உஞ்சைநகர் உறுகண் - துன்பம். தொடக்கத்தே இன்னாமையையுடையதாகிய இன்ப நிகழ்ச்சியென்க. தொன்னூலாளன் - நிமித்திகன்.