உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           வந்தது கூறென வணங்கி வாய்புதைத்
           தந்தர விசும்பினு மணிநில வரைப்பினும்
           பெண்ணே ருருவம் பிறர்தமக் கில்லா
           நுண்ணேர் மருங்கினும் மடித்தியெம் பெருமான்
     30    வடிவேற் றடங்கண் வாசவ தத்தைக்
           கடிவழிப் படூஉ முரிமையுட் கம்மியன்
           வல்வில் லிளையன் வராக னென்போன்
           சொல்லுவ துண்டெனச் செவ்வி வேண்டி
           நின்றனன் பல்லாண் டென்றவ னிறைஞ்ச்
 
             (இதுவுமது)
       26 - 34: வணங்கி..........இறைஞ்ச
 
(பொழிப்புரை) அதுகேட்ட காவலன் வணங்கி வாய் புதைத்து நின்று "வேந்தர்வேந்தே! வானுலகத்தினும் அழகிய இந்நிலவுலகத்தினும் தன்னைப் போன்ற பெண்ணுருவம் பிறர் யார்க்குமில்லாத எழிலுருவமுடையாளும் நுண்ணிய அழகிய இடையினையுடையவளும் பெருமானுடைய அடித்தியும் எம்பெருமாட்டியும் வடித்தவேல் போன்ற பெரிய கண்ணையுடையவளும் ஆகிய வாசவதத்தைக்குத் திருவடி வழிபாடு செய்பவனும் உரிமை மகளிர்பாற் பணிபுரியாநின்றவனும், வில்வல்லுநனும், இளமையுடையோனுமாகிய ' வராகன்' என்போன் பெருமான்பால் தான் கூறுதற்குரிய செய்தியுண்டென்று கூறி அதற்குரிய செவ்விபெறுதலை விரும்பித் தலைவாயிலிலே நின்றனன். பெருமான் பல்லாண்டு வாழிய" என்று கூறி மீண்டும் வணங்கா நிற்ப என்க.
 
(விளக்கம்) அந்தர விசும்பு : இருபெயரொட்டு. எம்பெருமான் என்றது ஈண்டு "தம்பெருமான் பாதமுடி தீட்டி" என்புழிப்போல (சீவக - 2608)ப் பெண்பாலுணர்த்தியது. எம்பெருமாட்டி என்பது கருத்து. உரிமை மகளிர்க்குப் பணிபுரிபவன் என்க.