உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
     195    பொலப்பூங் குடத்திற் போற்றித் தந்த
           தலைப்பூ நறுநீர் சிறப்பு முந்துறீஇத்
           தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து
           வெண்முகிற் பொடிக்கும் வெய்யோன் போலக்
           கைபுனை சிவிகையிற் கஞ்சிகை நீக்கி
     200   அம்பூந் தானை யடிமுதற் றடவர
           வெம்போர் வேந்தன் மெல்லென விழிந்து
 
           (பிரச்சோதனன் செயல்)
          195 - 201: பொலம்..........இழிந்து
 
(பொழிப்புரை) பொன்னாலியன்ற பூத்தொழிலமைந்த குடத்திலே பாதுகாத்துக் கொணரப்பட்ட தலையிலே தாமரைப்பூவையுடைய நறிய நிறைநீரும் பிறவுமாகிய மங்கலப் பொருள்களை முற்பட வைத்தும் புதுவதாகக் கொணரப்பட்ட மணல் பரப்பப் பட்ட அழகிய அரண்மனை முற்றத்தே வெள்ளை முகிலினின்றும் வெளிப்படாநின்ற செஞ்ஞாயிற்று மண்டிலம் போலே ஒப்பனை செய்யப்பட்ட அச்சிவிகையினது வெண்டிரையை நீக்கிக் கொண்டு அழகிய பூத்தொழிலையுடைய தன் (ஆடையின்) முன்றானை தனது அடிகளிற் புரளாநிற்ப வெவ்விய போராற்றலையுடைய அப்பிரச்சோதன மன்னன் ஆரவாரமின்றி மெல்ல இறங்கி என்க.
 
(விளக்கம்) பொலம் - பொன். போற்றி - பாதுகாத்து. தலையில் தாமரைப் பூவை வைக்கப்பட்ட நறிய நீர நிறைந்த குடம் என்க. சிறப்பு - மற்றைய மங்கலங்கள். ஞெமிரிய - பரப்பிய. பொடிக்கும் - தோன்றும். வெய்யோன் - ஞாயிறு.