உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           நெறிவெண் டிங்க ளகடுறத் தழுவும்
           கடிவெண் மாடத்துக் கன்னியங் கடிமனை
           இல்லாத் தன்மையிற் புல்லெனத் தோன்றும்
     205   பையுட் செல்வத்துக் கையற வெய்திப்
           பொன்னு மணியும் புகரறப் புனைந்த
           தொன்னா டமரத் துணைமுதற் பொறித்த
           தோடமை கொளுவத் தூடுற வளைஇத்
           தாழ்காழ் நகையொடு தாமந் துயல்வரும்
     210    மாசி றிண்ணிலை வாயிற் பேரறைப்
           பள்ளி மண்டபத் தொள்ளொளி கிளரத்
           திருவுகொ ளுரோணி யுருவுநலம் விரும்பிய
           விரிகதிர்ச் செல்வனின் வியப்பத் தோன்றிப
 
             (இதுவுமது)
      202 - 213: நெடுவெண்..........தோன்றி
 
(பொழிப்புரை) நெடிய வெண்டிங்களைத் தனது வயிற்றிலே பொருந்துமாறு தழுவுமளவு உயர்ந்த காவலையுடைய வெண்ணிறமான மாடத்தையுடைய கன்னி மாடத்தின் கண்ணே தன் கன்னியாகிய வாசவதத்தை இல்லாத் தன்மையினாலே பொலிவற்றுத் தோன்றுகின்ற தனக்குத் துன்பந் தருகின்ற அவளுடைய விளையாட்டுப் பொருள்களைக் கண்டு கையறவுகொண்டு பொன்னாற் குற்றமற ஒப்பனை செய்யப்பட்ட பழைய துறக்க நாடும் மணியாற் குற்றமற ஒப்பனை செய்யப்பட்ட பழைய நாகர் நாடும் ஒப்ப ஆணும் பெண்ணுமாகிய காதலர் உருவங்கள் பொறிக்கப்பட்ட தொகுதி யமைந்ததும், மூட்டுவாயினூடே பொருந்த வளைத்துக் கோத்துந் தூங்காநின்ற ஒளி முத்து மாலைகளோடு மலர் மாலைகளும் அசையா நின்ற குற்றமில்லாத திண்ணிய நிலைகளையுடைய வாயிலையுடையதும் அரிய பெரிய அறையாகிய பள்ளி மண்டபத்தினது பேரொளி மேலும் ஒளிபெறும்படி அழகுகொண்ட உரோகணியினது எழில் நலத்தை பெரிதும் விரும்பிய நிலவொளி விரிக்கும் திங்கட் கடவுளே போன்று கண்டோர் மருளத்தோன்றி என்க.
 
(விளக்கம்) பள்ளியுள் (180) மம்மர் தீரவும் (190) எதிர் கொளவும் (191) முற்றத்து (167) நீக்கி (199) இழிந்து (201) கையறவெய்தி (205) கிளரவும் (211) வியப்பவும் தோன்றி (213) என இயைபு காண்க. அகடு - வயிறு. மாடத்து அங்கடிமனைக் கன்னி இல்லாத் தன்மையின் என மாறுக. கன்னி - வாசவதத்தை. புல்லெனத் தோன்றும் செல்வம் பையுட் செல்வம் என்று தனித்தனி கூட்டுக. செல்வம் என்றது, வாசவதத்தையின் விளையாட்டுப் பொருள்களை. அவற்றைக் கண்டு துன்பத்தாற் கையற வெய்தினன் என்க. பொன்னாற் புனைந்த நாடும் மணியாற் புனைந்த நாடும் என்க. அவையாவன: வானவர் நகரும் நாகர் நகருமாம். இவை நிரலே புகழினும் போகத்தினும் தலை சிறத்தலின் உவமையாயின துணை காதற்றுணை கொளுவத்து என்புழி அம் - சாரியை. நகைக்காழ்தாழ் என மாறுக. காழ் - முத்து மாலை. தாமம் - மலர்மாலை. கதிர்ச் செல்வன் - திங்கள்.