உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           உவந்த வொள்ளிழை யுள்ள நோக்கி
           நிகழ்ந்த திற்றென நெருப்பு நுனையுறீஇச்
           சுடுநா ராசஞ் செவிசெறித் தாங்கு
           வடிவேற் றானை வத்தவன் றன்னொடு
     240    பாவை பிரிவினைக் காவல னுணர்த்தலின்
 
           (பிரச்சோதனன் கூற்று)
           236 - 240: உவந்த..........உணர்த்தலின்
 
(பொழிப்புரை) இவ்வாறு பெரிதும் மனமுவந்து கூறிய ஒள்ளிய அணிகலன் அணிந்த பெருந்தேவியின் உள்ளத்தை அறிந்து இஃது ஏற்ற செவ்வியென்று உட்கொண்டு மன்னவன் வடித்த வேற்படையினையுடைய வத்தவ மன்னனோடு தம் திருமகளாகிய வாசவதத்தை சென்றுவிட்ட செய்தியினை நிகழ்ந்தது இவ்வாறெனத் தீயின்கண் நுனியைக் காய்ச்சிச் சுடாநின்ற இரும்புக் கம்பியைச் செவியினூடே செருகினாற்போன்று கூறியுணர்த்தலானே என்க.
 
(விளக்கம்) ஒள்ளிழை - கோப்பெருந்தேவி. உள்ளம் - கருத்து. இற்றென - இஃதென்று. நாராசம் - இரும்புக்கம்பி. வத்தவன் - உதயணன். பாவை - வாசவதத்தை. காவலன் - பிரச்சோதனன்.