உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           இசைகொள் சீறியா ழின்னிசை கேட்ட
           அசுண நன்மா வந்நிலைக் கண்ணே
           பறையொலி கேட்டுத்தன் படிமறந் ததுபோல்
           நீலத் தன்ன கோலத் தடங்கண்
     245   முத்துற ழாலி தத்துவன தவழப்
           பெறலரு மென்மகள் பிரிந்தன ணம்மெனக்
           கூறிய கிளவி கூற்றுவ னிமிழ்த்த
           பாசம் போலப் பையுள் செய்ய
           அலமந் தழூஉ மஞ்சி லோதியை
 
           (கோப்பெருந்தேவி வருந்தல்)
               241 - 249: இசை..........ஓதியை
 
(பொழிப்புரை) அது கேட்டு, இசைகொண்ட சீறியாழினது இனிய இசையைக் கேட்டின்புற்றிருந்த அசுணமா அப்பொழுதே பறை முழக்கத்தைக்கேட்டுத் துன்பத்தாலே தன் மெய்ம்மறந்தாற் போன்று நீலமலர்போன்ற அழகுடைய தனது பெரிய கண்களினின்றும் முத்துப் போன்ற நீர்த்துளிகள் வீழ்ந்து வழியாநிற்ப அரசன் "பெறலரும் நம்மகள் வாசவதத்தை நம்மைப்பிரிந்து போயினள்" என்று கூறிய அக்கொடியமொழி கூற்றுவனாற்றன்னைக் கட்டப்பட்ட கயிறுபோன்று பெருந்துன்பத்தை யுண்டாக்குதலானே மனஞ் சுழன்று அழாநின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய அக்கோப்பெருந்தேவியை என்க.
 
(விளக்கம்) அசுணமா நல்லிசை கேட்கின் மனமுருகி மகிழ்வதும், வல்லிசை கேட்கின் மனந்துடித்துயிர் விடுவதும் ஆகிய விலங்கு ; இதனை, "மறையிற்றன் யாழ்கேட்ட மானையருளா தறைகொன்று மற்றதன் ஆருயிரெஞ்சப் பறையறைந்தாங்கு" எனவும் (கலி - 143) "பறைபட வாழா வசுணமா" எனவும் (நான்மணி - 4) "இன்னளிக்குரல் கேட்ட அசுணமா வன்னளாய்" எனவும் (சீவக - 1402) 'யாழ் நறையடுத்த வசுண நன்மாச் செவிப் பறையடுத்து போலும்" எனவும் (கம்ப - அவையடக்கம்) பிற சான்றோர் ஓது மாற்றானு முணர்க நீலம் - நீலமலர். நம் - நம்மை. இமிழ்த்த - கட்டிய. பாசம் - கயிறு பையுள் - துன்பம். அலமந்து - சுழன்று. அஞ்சிலோதி - கோப்பெருந்தேவி.