உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
         
     15    புரவி பூண்ட பொன்னுகக் கொடுஞ்சிப்
           பரவைத் தட்டிற் பன்மணிப் பலகை
           அடிதொடைக் கமைந்த கிடுகுடைக் காப்பிற்
           காழமை குழிசிக் கதிர்த்தவா ரத்துச்
           சூழ்பொற் சூட்டிற் சுடர்மணிப் புளகத்
     20    தாழாக் கடுஞ்செல லாழித் திண்டேர்
 
                    (தேர்கள்)
           15 - 20 :  புரவி..........திண்டேர்
 
(பொழிப்புரை) குதிரைகள்பூட்டப்பட்டனவும், பொன்னாலியன்ற நுகத்தடியையும் கொடுஞ்சியையும் பரந்த தட்டினையும் பல்வேறு மணிகள் பதித்த சுற்றுப் பலகைகளையும் அடியிட்டு நிற்றற்கும் அம்பு தொடுத்தற்கும் பொருந்திய உறுப்புகளையும் கிடுகுப் பலகைகளையுடைமையாலுண்டான காவலையும் வயிரமேறிய மரத்தாலியன்ற (சக்கரத்தின்) குடங்களையும். ஒளிவிடும் ஆரக்கால்களையும், சூழ்ந்த பொன் வட்டைகளையும், சுடராநின்ற மணிகளையும் கண்ணாடிகளையும், நிலத்திலே அழுந்தாமல் விரைந்து செல்லும் செலவினையுடைய உருளைகளையும், உடைய திண்ணிய தேர்களும் என்க.
 
(விளக்கம்) நுகம் - நுகத்தடி. கொடுஞ்சி - தாமரை மலர் வடிவிற்றாய்த் தேர்த்தட்டில் நடப்படுமோருறுப்பு. பரவை - பரப்பு. அடிக்கும் தொடைக்கும் அமைந்த என்க. காழ் - வயிரம். குழிசி - குடம்; உருளையின் குடம். ஆரம் - ஆரக்கால். சூட்டு - வட்டை. ஆழி - உருளை.