உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            திண்டேர்க் கமைந்த தண்டாக் காப்பிற்
           குன்றுகண் டன்ன தோன்றல குன்றின்
           அருவி யன்ன வுருவுகொ ளோடைய
           ஓடைக் கமைந்த சூழிச் சுடாநுதற்
     25    கோடில வெழுதிய கோலக் கும்பத்
           திடுபூந் தாம மிருங்கவு ளசைஇப்
           படுவண் டோப்பும் பண்ணமை கோலத்து
           விண்ணுரு மன்ன வெடிபடு சீற்றத்
           தண்ணல் யானை யவையவை தோறும்
 
                    (யானைகள்)
           21 - 29 :  திண்டேர்..........யானை
 
(பொழிப்புரை) அத்திண்ணிய தேர்ப்படைக்கேற்ற ஒழியாத காவலையுடைய மலைகளைக் கண்டாற் போன்ற தோற்றமுடையனவும், அம் மலைகளில வீழும் அருவிகளைப் போன்ற வடிவமைந்த முகபடாத்தை யுடையனவும், அம்முகபடாத்திற்கேற்ற உச்சியினையும் ஒளி படைத்த நெற்றியையும் மருப்புகளையும் இலவம்பூ வெழுதப்பட்ட கும்பத்தின்கண் இடப்பட்ட மலர்மாலை பெரியகவுளிடத்தே அசைந்து ஆங்கு மொய்க்கும் வண்டுகளை ஓட்டாநின்ற ஒப்பனை செய்யப்பட்ட அழகினையும் வானத்தே தோன்றும் இடி போல முழங்காகின்ற சினத்தினையும் உடையனவும் ஆகிய பெருமைமிக்க யானைகளும் என்க.
 
(விளக்கம்) தண்டா - ஒழியாத. தோன்றல் - தோற்றமுடையன. ஓடை - முகபடாம். சூழி - உச்சி. முகபடாம் என்னின் வாளா அடை மாத்திரையாய்க் கொள்க. சுடருகின்ற நுதலையும் சுடருகின்ற கோட்டையும் என இரண்டற்கும் கொள்க. இலவு - இலவமலர்.