உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
         
     60    கண்ணுறு பிறங்கற் கருவரை நுனித்தலை
           வெண்ணிற வருவி வீழ்ச்சி யேய்ப்ப
           மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த
           நித்திலத் தாம நிலையின் வழாமை
           வைத்த தலையிற் றாக வலிசிறந்து
     65    வித்தகக் கோலத்து வீழ்ந்த கிழவற்குப்
           பத்தினி யாகிய பைந்தொடிப் பணைத்தோட்
           டத்தரி நெடுங்கட் டத்தை தம்மிறை
           ஆணை யஞ்சிய வசைவுநன் கோம்பிக்
           கோணை நீண்மதிற் கொடிக்கோ சம்பி
     70    நகைத்துணை யாய மெதிர்கொள நாளைப்
           புகுத்துவ லென்பது புரிந்தது போலப்்
 
                (பிடியின் நிலை)
          60 - 71 :  கண்ணூறு..........போல
 
(பொழிப்புரை) தொலைவிலுள்ளார்கண்ணினும் காணப்படா நின்ற உயர்ச்சியையுடைய கரியதொரு மலையினது உச்சியினின்றும் இருமருங்கும் வீழாநின்ற அருவியினது வீழ்ச்சியைப்போன்று தனது மத்தகத்தின் இருமருங்கினும் மலர்மாலையோடு கிடந்த முத்துமாலை தானும் கிடந்த நிலையினின்றும் பிறழாதபடி தனது தலையினை ஒரே நிலையில் வைத்துக்கொண்டு, வலிமையினாலே சிறப்புற்று, வியத்தகு கோலமுடைமையாலே தன்னைப் பெரிதும் விரும்பிய உதயணகுமரனுக்குப் பத்தினியாகிய பசிய தொடியினையும் பணைத்த தோள்களையும் தாவிப் படராநின்ற செவ்வரியையுடைய நீண்ட விழிகளையும் உடைய வாசவதத்தையார்க்குத் தம் இறைவனாகிய பிரச்சோதனன் ஆணைக்கு அஞ்சியதனாலே உண்டான வருத்தம்தீர்த்து அவரை நன்குபாதுகாத்து வளைந்து நீண்ட மதிலையும் கொடியையுமுடைய கோசம்பி நகரத்தின் கண்ணுள்ள நகைப்பு மிக்க தோழியர் கூட்டம் எதிர்கொள்ளும்படி இவ்விரவு நீங்கும் நாளைப்பொழுதிலேயே கொண்டுபோய்ச் சேர்ப்பேன் என்று விரும்பியது போன்று என்க.
 
(விளக்கம்) விரும்பியது போன்று ஓடுதல்புரிந்தபிடி என (16) இயையும். கண் இடமுமாம். பிறங்கல் - உயர்ச்சி. தலைநுனி - நுனித்தலை என மாறி நின்றது. அருவி முத்துமாலைக்குவமை. முத்து மாலை பிறழாதபடி தலையை அசையாதபடி வைத்துக்கொண்டு என்பது கருத்து. வித்தகக் கோலமுடைமையால் வீழ்ந்த என்க. வீழ்ந்த - விரும்பிய. கிழவன் - கணவன். உதயணன் தம்மிறை என்றதற்கேற்பத் தத்தையார் என்க. இறை - ஈண்டுப் பிரச்சோதனன். அசைவு - வருத்தம். கோணை - வளைவு. கோசம்பி வத்தவநாட்டுத் தலைநகரம். நகை - நகைப்பு. மகிழ்ச்சியுமாம். புரிந்தது - விரும்பியது.