உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
            அங்க ணகல்வய லார்ப்பிசை வெரீஇய
           பைங்க ணெருமை படுகன் றோம்பிச்
           செருத்தல் செற்றிய தீம்பா லயல
           உருவ வன்னமொடு குருகு பார்ப்பெழப்
     145    பாசடைப் பிலிற்றும் பழனப் படப்பை
           அறையுறு கரும்பி னணிமடற் றொடுத்த
           நிறையுறு தீந்தே னெய்த்தொடை முதிர்வை
           உழைக்கவின் றெழுந்த புழற்காற் றாமரைச்
           செம்மல ரங்கட் டீயெடுப் பவைபோல்
     150    உண்ணெகிழ்ந் துறைக்குங் கண்ணகன் புறவிற்
 
                    (மருதநிலம்)
            141 - 150 :  அங்கண்..........புறவின்
 
(பொழிப்புரை) அழகிய இடமைந்த அகன்ற கழனிகளிலே உழவர் ஆரவாரிக்கும் முழக்கத்திற்கு அஞ்சிய பசியகண்களையுடைய எருமைகள் தம்பாற் றோன்றிய கன்றுகளைப் பாதுகாத்தூட்டி எஞ்சிய தமது மடியிற் சுரந்து நிரம்பிய இனிய பாலைப் பக்கத்தேயுள்ள அழகிய அன்னங்களும் நாரைகளும் அவற்றின் குஞ்சுகளும் அகலும்படி பசிய இலைகளிலே பிலிற்றற்கிடனான பொதுநிலங்களையும் தோட்டங்களையும் பாத்திகளிலே பொருந்திய கரும்பின் அழகிய மடலிலே கட்டிய இனிய தேன் நிரம்பிய நெய்ப்புடைய முதிர்வுடைய தொடை பக்கத்தே அழகுற்று வளர்ந்த உட்டுளையமைந்த தண்டினையுடைய தாமரையினது சிவந்த மலர்களினூடே நெய்சொரிந்து வேள்வித் தீயை வளர்ப்பது போன்று தம் அகம் நெகிழ்ந்து தேனைத் துளித்தற்கிடமான இடமகன்ற சோலைகளையும் என்க.
 
(விளக்கம்) வயலில் உழவர் செய்யும் ஆர்ப்பிசை என்க. படுகன்று - தம் வயிற்றிலுண்டான கன்று. செருத்தல் - மடி உருவம் - அழகு. குருகு - நாரை. பார்ப்பு - குஞ்சு. பாசடை - பசிய இலை. பழனம் - பொது நிலம். படப்பை - தோட்டம். அறை - பாத்தி. தொடை - தேன் அடை. உழை - பக்கம். கவின்று - அழகுற்று. புழல் - துனை. எடுப்பவை - வளர்ப்பவை. கண் - இடம். புறவு - சோலை.